பக்கம் எண் :


210


     தலைவர் பிரிந்த நாள் உண்மையிலே சிலவாயினும் அவை தலைவிக்குப் பலவாகத் தோற்றுதல் இயல்பு: நெடுநல்வாடையென்ற பெயர்க்காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர், ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒருபொழுது ஓரூழிபோல் நெடிதாகிய வாடையாய்’ என்றதைக் கருதுக.

     “என்னோடு உடனிருத்தற்குரிய பருவத்திற் பிரிந்தனர்; அது துன்பத்திற்குக் காரணமாயிற்று; அங்ஙனம் பிரிந்தவர் சில நாளில் மீண்டு வந்திருப்பின் அத்துன்பத்தை ஆற்றியிருப்பேன்; அவ்வாறின்றிப் பல நாட்களாகவும் இன்னும் வந்திலர்; யான் என் செய்கேன்!” என்று தலைவி கூறி இரங்கினாள்.

     நாளே: ஏகாரம் பிரிநிலை; ஆகுவவே: ஏகாரம் அசை.

     இரண்டாவது கருத்து: தலைவன் தான் கூறிய பருவத்தே வாராது தாழ்த்தானாக அவன் கொடுமையை நினைந்து வருந்திய தலைவியை நோக்கி “ அவன் நின்மாட்டுச் செய்த தலையளியை நினைந்து இக் கொடுமையை மறப்பாயாக” என்ற தோழிக்குத் தலைவி, “அவர் பிரிந்த காலமும் ஏற்றதன்று; வருங்காலமும் கடந்தது; பன்னாளாயின; இனி எங்ஙனம் மறப்பது?” என்று கூறியது. இது முன்னையதினும் சிறப்புடையதன்று.

     மேற்கோளாட்சி 1. அம்மவென்னும் இடைச்சொல் கேளென்னும் முன்னிலை யேவற்பொருட்கண் வந்தது (நன். 437, மயிலை.)

     மு. பாலைக்குப் பின்பனிப்பருவம் வந்தது; தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். அகத். 10, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     2. நூலறு முத்து: குறுந். 51:2.

     தண்சிதர் உறைத்தல்: குறுந். 242:2.

     2-3. அறுகின் நுனியிலுள்ள பனித்துளிக்கு முத்து: “ஊசியறுகை யுறுமுத்தங் கோப்பனபோல், மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப” (நக்கீரர் வாக்கு.)

     3-4. நற். 391:3-4.

(104)
  
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் கேண்மை வரைவினால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)
 105.    
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக் 
    
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் 
    
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் 
    
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் 
5
சூர்மலை நாடன் கேண்மை் 
    
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

நக்கீரர்.