பக்கம் எண் :


28


(தலைமகனைப் பிரிந்திருக்கும் தலைவி, ‘‘நெஞ்சே, தலைவர் வாராமையின் உடம்பு மெலிந்தது; துயிலையும் ஒழிந்தேன்; துயர் மிகுதியால் அழுவேன்; இங்ஙனம் இங்கிருந்து துயருறுதலைக் காட்டிலும் அவர் இருக்கும் இடத்திற்குச் செல்லுதல் நலம்’’ என்று தோழி கேட்கும்படி நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்த் தனது துயர மிகுதியைப் புலப்படுத்தியது.)
 11.   
கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 
    
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி 
    
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே 
    
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது 
5
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
    
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
    
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
    
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே. 

என்பது தலைமகள், தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச்சொல்லியது.

மாமூலனார்.

    (பி-ம்.) 1. ‘நெகிழ நாளும்’ 2. ‘பாடில கலுழுமங் கண்ணொடு’ 3. ‘முயங்குவம்’ 4. ‘எழுகினி வாழி நெஞ்சே’, ‘வாழிய நெஞ்சே’, ‘முனாஅது’, ‘முனையது’; 6. ‘வல்வேற்’; 7. ‘தேத்தாராயினும்’; 8. ‘வழிவிடல்’, ‘நட்பே’,

    (ப-ரை.) என் நெஞ்சே வாழி-எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ- சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால் நெகிழா நிற்ப, நாள்தோறும் பாடு இல கலிழும் கண்ணொடு- நாள்தொறும் இமை பொருந்துதல்இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு, புலம்பி- தனித்து வருந்தி, ஈங்கு இவண் உறைதல் உய்குவம்- இப்படி இங்கே தங்குதலில் இருந்து தப்புவேமாக; ஆங்கு- தலைவர் இருக்கும் இடத்திற்கு, இனி எழு-செல்லஇப்பொழுது எழுவாயாக; முனாது - முன்னே உள்ளதாகிய, குல்லை கண்ணி-கஞ்சங் குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகர் முனையது-வடுகருக்குரிய இடத்தினதாகிய, பல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர்-பல வேலையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்- மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும், அவருடை நாட்டு-