தீன்மிதி நாகன் (பி-ம். தீன்மதி நாகன்.) (பி-ம்.) 5. ‘செழுமலை’; 6-7. ‘நம், மல்லேர்’.
(ப-ரை) தோழி-, மெல் தோள் நெகிழ்த்த செல்லல் - நின் மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம், வேலன் - வெறியாட்டாளன், வென்றி நெடுவேள் என்னும் - வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்லுவான்; அன்னையும் - நம் தாயும், அது என உணருமாயின் - அதுவென்றே நினைப்பாளாயின், ஆயிடை - அப்பொழுது, கூழை இரு பிடி - குறிய கருமையான பெண் யானையினது, கை கரந்தன்ன - கை மறைந்தாற் போன்றல, கேழ் இரு துறுகல் கெழுமலை நாடன் - கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன், நம் இல்லோர் பெரு நகை காணிய - நம் வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு, சிறிது - சிறிது நேரம், வல்லே வருக - இங்கே விரைந்து வந்து செல்வானாக.
(முடிபு) தோழி, செல்லலை வேலன் நெடுவேளென்னும்; அன்னையும் அதுவென உணருமாயின், மலைநாடன் காணிய சிறிது வல்லே வருக.
(கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.