பக்கம் எண் :


220


(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)
 111.    
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன் 
    
வென்றி நெடுவே ளென்னு மன்னையும் 
    
அதுவென வுணரு மாயி னாயிடைக் 
    
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன 
5
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 
    
வல்லே வருக தோழிநம் 
    
இல்லோர் பெருநகை காணிய சிறிதே. 

என்பது வரைவு நீட்டித்த வழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறி யெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப் புறமாகத் தோழி கூறியது.

தீன்மிதி நாகன் (பி-ம். தீன்மதி நாகன்.)

     (பி-ம்.) 5. ‘செழுமலை’; 6-7. ‘நம், மல்லேர்’.

     (ப-ரை) தோழி-, மெல் தோள் நெகிழ்த்த செல்லல் - நின் மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம், வேலன் - வெறியாட்டாளன், வென்றி நெடுவேள் என்னும் - வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்லுவான்; அன்னையும் - நம் தாயும், அது என உணருமாயின் - அதுவென்றே நினைப்பாளாயின், ஆயிடை - அப்பொழுது, கூழை இரு பிடி - குறிய கருமையான பெண் யானையினது, கை கரந்தன்ன - கை மறைந்தாற் போன்றல, கேழ் இரு துறுகல் கெழுமலை நாடன் - கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன், நம் இல்லோர் பெரு நகை காணிய - நம் வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு, சிறிது - சிறிது நேரம், வல்லே வருக - இங்கே விரைந்து வந்து செல்வானாக.

     (முடிபு) தோழி, செல்லலை வேலன் நெடுவேளென்னும்; அன்னையும் அதுவென உணருமாயின், மலைநாடன் காணிய சிறிது வல்லே வருக.

     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.