பக்கம் எண் :


240


(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)
 123.    
இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல் 
    
நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறைக் 
    
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப 
    
இன்னும் வாரார் வரூஉம் 
5
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. 

என்பது பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப் புறத்தானாதல் அறிந்து தலைமகட்குச் சொல்லியது.

ஐயூர் முடவன்.

     (பி-ம்.) 2. ‘நிலவு குவித்தன்ன’ ; 4. ‘இன்னாராவார’்.

     (ப-ரை.) தோழி---, நிலவு குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறை - நிலவைத் தொகுத்தாற்போன்ற தோற்றத்தை யுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள, இருள் திணிந்தன்ன ஈரம் தண் கொழு நிழல் - இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய, கருகோடு புன்னை பூ பொழில் - கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை, புலம்ப - தனிமைப் பட்டிருப்ப, இன்னும் வாரார் - தலைவர் இன்னும் வந்தாரிலர்; பல் மீன் வேட்டத்து - பல வகை மீன்களை வேட்டையாடுதலையுடைய, என்னையர் திமில் - தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள், வரூ உம் - மீண்டு வரும்.

     (முடிபு) பொழில் புலம்ப, இன்னும் வாரார்; என்னையர் திமில் வரூஉம்.

     (கருத்து) தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.

     (வி-ரை.) பகலில் தலைவியைக் கடற்கரைப் பொழிலிற் கண்டு இன்பந் துய்த்துவரும் தலைவன் ஒரு நாள் அங்கே தலைவி அறியாதவாறு அவளும் தோழியும் பேசுவனவற்றை அறிந்து மகிழும் அவாவினால் மறைந்திருந்தான். அவன் வந்திலனென்று கருதிய தோழி பின்பு அவன் அருகில் மறைந்திருப்பதை உணர்ந்து அவன் கேட்கவேண்டுமென்னும் கருத்தோடு தலைவிக்குச் சொல்லுவாளாய் இதனைக் கூறினாள்.

     இருள் திணிந்தன்ன நிழலென்றது உள்ளே நிகழ்வனவற்றைப் புறத்தார் அறிவரிய நிலையின தென்றபடி. கொழு நிழல் புன்னைப்பூம் பொழிலுக்கு