பக்கம் எண் :


251


(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ நினக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையது நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)
 129.    
எலுவ சிறாஅ ரேமுறு நண்ப 
    
புலவர் தோழ கேளா யத்தை 
    
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் 
    
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் 
5
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் 
    
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே. 

என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

கோப்பெருஞ் சோழன்.

     (பி-ம்.) 1. ‘ரெமமுறு’, ‘ரேமமுறு’; 4. ‘பகுவெண’்; 5. ‘விளங்குந் திருநுதல’்.

     (ப-ரை.) எலுவ- எம் நண்ப, சிறாஅர் ஏமுறு நண்ப - இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய், புலவர் தோழ - அறிவுடையாருக்குத் தோழ, கேளாய் - கேட்பாயாக: மா கடல் நடுவண் -பெரிய கடலின் நடுவில், எண்ணாள் பக்கத்து பசு வெண் திங்கள் - எட்டாந் திதிக்குரிய இளைய வெள்ளிய திங்கள், தோன்றி யாங்கு - தோன்றியதைப் போல, கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்--ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி, புது கோள் யானையின் - புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல, எம் பிணித்தற்று - எம்மைப் பிணித்தது.

     (முடிபு) எலுவ, நண்ப, தோழ, கேளாய்: சிறுநுதல் எம்மைப் பிணித்தற்று.

     (கருத்து) ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.

     (வி-ரை.) எலுவ வென்றது தனக்குத் தோழமையுடைமையைச் சுட்டியது. தான் தலைவியைப் பாங்கனது உதவியினாற் கண்டு இன்புற லாகுமென்று எண்ணியவனாதலின், ஏமுறு நண்பவென்றான்; ஏமம் ஏமென்றாயிற்று (முருகு. 97, ந.) அறிவுரையைக் கூறுதல் அவன் கடமை யென்பதைப் புலப்படுத்திப் புலவர் தோழ வென்றான்; சிறுவர் நண்ப வென்றதனால் இழுக்கு நேராதவாறு புலவர் தோழவென்று சிறப்பித்தான்.

     எண்ணாட்பக்கம் - எட்டாவது திதி; அட்டமி. பசுமை - இளமை. கூந்தலுக்குக் கடலும் நுதலுக்குத் திங்களும் உவமைகள். கதுப்பயல் விளங்கும் சிறுநுதலென்றது அளகமாகிய முன்னுச்சி மயிருக்கு அருகில் விளங்கும் நெற்றியென்றபடி; இது பற்றியே, “அளகவாணுதல்”