“நம் தலைவர் இவ்வுலகத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலுள்ள ஓரூரில் ஒரு குடியில் இருப்பர்; சாரணரைப் போல இவ்வுலகுக்குப் புறம்பே செல்பவரல்லர்; ஆதலின் எல்லா நாட்டிலும் உள்ள ஊர்கள் யாவற்றிலும் அமைந்த குடிகளையெல்லாம் தேடின் அகப்படாமற் போதற்கு நியாய மில்லை; அங்ஙனம் தேடித் தருவேன். நீ வருந்தற்க” என்று தோழி, தலைவியை ஆற்றுவித்தாள்.
ஏ:அசை நிலை.
இரண்டாவது கருத்து: ‘’தலைவரைத் தேடின் அகப்படுவார்” என்று கூறும் வாயிலாக, தூதுவிட்டு அங்ஙனம் தேடி அவரைக் கண்டு தன் நிலையைக் கூறச்செய்யின் நலமென்னும் கருத்தைத் தலைவி தோழிக்குப் புலப்படுத்தினாள்.
மேற்கோளாட்சி மு. செவிலி இடைச்சுரத்துச் சென்று தலைவியைத் தேடத் துணிந்தது; ‘இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப் பட்டாரென்றது அவ்விருவரையும்’ (தொல். அகத். 37,ந.தமிழ்நெறி. 23, மேற்..) இருவராவார்: தலைவனும் தலைவியும்.
வரலாறு
இச்செய்யுளைப் பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்தா ரென்றதொரு செய்தி,
| “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை |
| வெள்ளி வீதியைப் போல நன்றும் |
| செலவயர்ந் திசினால் யானே” (அகநா. 147:810) |
என்று ஒளவையாராற் கூறப்பட்டுள்ளது. அகநானூற்றின் 45-ஆம் செய்யுளில் வெள்ளி வீதியார்,
| “ஆதி மந்தி போலப் பேதுற் |
| றலந்தனெ னுழல்வென் கொல்லோ” |
என்று பாடியுள்ளார். வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடிய வரலாற்றை நோக்குமிடத்து அங்ஙனம் தேடுவதற்குமுன் அகநானூற்றின் 45-ஆம் செய்யுளையும், குறந்தொகைச் செய்யுளாகிய இதனையும் கூறினரென்று தோற்றுகின்றது.
ஒப்புமைப் பகுதி 1-2. நிலத்திற் புகுதல், வானமேறுதல், கடலிற் செல்லுதல்: “நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச,் சலத்திற் றிரியுமோர் சாரணன்” (மணி. 24:46-7); “நீரினிற் பூவில் வானி னினைத் துழி யொதுங்கு கின்ற, சாரண ரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்” (சூடாமணி. 2:4.)
3. மு. அகநா. 236:17.
(130)
(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)