பக்கம் எண் :


262


     5-6. அருவிக்குப் பாம்பு: “பாம்பென முடுகு நீர்” (அகநா. 339:3); “ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி” (தொல். செய். 54, பேர். மேற்.); “நெடுவரை மருங்கிற் பாம்பென விழிதரும், கடுவரற் கலுழி” (யா.வி. 95. மேற். ‘துணியிரும்’); “பாம்பளை புகுவதேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர்”, “குண்டிகை யிருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை, எண்டருந் தடையால் வல்லோனிருங்கடத் திட்ட பாந்தள், மண்டலத் தொருவ னீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே” (கந்த. ஆற்றுப். 33, இந்திரனருச்.2.) 7.விலங்கு மலை நாடு: குறுந். 144:7. 2-7.நட்பு, பிரிவின்றாயின் நன்று: குறுந். 32:3, 57:3

(134)
  
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
 135.   
வினையே யாடவர்க் குயிரே வாணுதல் 
    
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென 
    
நமக்குரைத் தோருந் தாமே 
    
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.  

என்பது தலைவன் பிரியுமென வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.

பாலைபாடிய பெருங்கடுங்கோ.

     (பி-ம்.)4.’அழாற்றோழி’,

     (ப-ரை.) தோழி---, வினையே - தொழில் தான், ஆடவர்க்கு உயிர் - ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்; வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய, மனையுறை மகளிர்க்கு - இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர் என - கணவன்மாரே உயிர் ஆவரென்று, நமக்கு உரைத்தோரும் தாமே - நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே; அழாஅல் - அழுதலையொழிவாயாக; செலவு அழுங்குவர் - அவர் செல்லுதலைத் தவிர்வர்.

     (முடிபு) தோழி, உரைத்தோரும் தாமே; அழாஅல்; செலவு அழுங்குவர்.

     (கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.

     (வி-ரை.) தலைவன், “ஆடவர்க்கு வினை உயிர்” என்று கூற அதனால், “இவன் வினைமேற் பிரியக் கருதினான்” என்று எண்ணித் தலைமகள் வேறுபட்டாள். அதுகண்ட தோழி, “வினையே ஆடவர்க்கு உயிரென்ற தன்றி, மகளிர்க்கு ஆடவரே உயிரென்றும் அவர் கூறியுள்ளார்; ஆதலின் அவர் உடலாகிய நின்னைவிட்டுப் பிரியார்; நீ வருந்தாதே” என்று கூறி ஆற்றுவித்தாள். இது கற்புக் காலத்தது.