பக்கம் எண் :


267


     செல்லலென்பது துன்பத்துக்குப் பெயராதலைப் போலச் செலவென்பதையும் துன்பத்துக்குப் பெயராகக் கொண்டு யான் துன்பத்தை அடையும்படி இரவலர் வாரா வைகல் பல எனக்கு ஆகுக வென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று; செலவு உறுதக - துன்பத்தை அடைய.

     இரப்போரைக் காணாமலும், இரப்போர்க்கு ஈயாமலும் இருக்கும் நாள் கெட்ட நாளென்பது கருதி வஞ்சினங் கூறுவோர் இங்ஙனம் குறிப்பது மரபு;

  
“புரப்போர் புன்கண் கூர  
  
 இரப்போர்க் கீயா வின்மையா னுறவே”      (புறநா. 72:17-8), 
  
“ஏற்றவற் கொருபொரு ளுள்ள தின்றென்று 
  
 மாற்றல னுதவலன் வரம்பில் பல்பகல் 
  
 ஆற்றில னுழற்றுமோ ராத னெய்துமக் 
  
 கூற்றுறு நரகினோர் கூறு காள்கயான்”      (கம்ப. பள்ளியடைப். 113.) 
  
“கருந்தடங்கண் மங்கையரை நோக்குற்ற கண்ணும் 
  
 பெருந்தடந் தோள்பிணித்த கையும் - பருந்தின் 
  
 வளைவாயிற் பெய்யேனேல் வந்திரத்தார் துன்பம் 
  
 களையாது மாற்றுகவென் கை”         (வீர. பொருட். 17, மேற்.) 

என்பவற்றை ஓர்க.

     தலைவன் இங்ஙனம் கூறியதனால் தலைவி, “இவர் செலவுறுதற்குரிய காரியமும் உண்டு போலும்!” என்று கருதிப் பிரிவை அஞ்சுவாள்;

     “இவ்வாறு இவை கேட்ட தலைமகள் ‘எம்பெருமான் நின்னிற் பிரியேன், பிரியினுமாற்றே னென்கின்றானால் பிரிவென்பதும் ஒன்று உண்டுபோலும்! கேட்ட தகைமையால் அது தங் காதலரைக் காணாதுங் கேளாதுங் கையினகன்று மெய்யினீங்குவது’ எனக் கலங்கி... மனமுருகிப் பசந்து காட்டினாள்” (இறை. 2, உரை) என்பதைப் பார்க்க.

     மேற்கோளாட்சி மு. தெளிவகப்படுத்தியது (தொல். களவு. 10, ந.); தீராத் தேற்றம். (இ.வி. 497.)

     ஒப்புமைப் பகுதி 1. மெல்லியலரிவை :குறுந்.89:7,ஒப்பு.

(137)
  
(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)
 138.    
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே 
    
எம்மி லயல தேழி லும்பர் 
    
மயிலடி யிலைய மாக்குர னொச்சி 
    
அணிமிகு மென்கொம் பூழ்த்த 
5
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.