பக்கம் எண் :


35


(பாங்கியினாற் குறை மறுக்கப்பட்ட தலைவன், ‘‘என்னைத் துன்புறுத்தியவள் இன்னாள் என்பதை யாவரும் அறிந்து கூறும்படி மடன் மாஊர்ந்து மறுகிற் செல்வேன்’’ என்று அப்பாங்கி கேட்பக்கூறியது.)
 14.   
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
    
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
    
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
    
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
5
நல்லோள் கணவ னிவனெனப் 
    
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

என்பது ‘‘மடன்மா கூறு மிடனுமா ருண்டே’’ (தொல். களவு.11) என்பதனால் தோழி குறை மறுத்துழித் தலைமகன், மடலேறுவல் என்பதுபடச்சொல்லியது.

    (குறை-காரியம்; தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ளச் செய்தல்.பட- குறிப்பினால் புலப்பட.)

தொல்கபிலர்.

    (பி-ம்.) 1. ‘அமிர்துபொதி’, ‘வஞ்சி’ 4-5. ‘மறுகு நல்லோர்’ 6. ‘கூறுகயாஅநாணுகஞ்’, ‘கூறயாநண்ணுகஞ்’.

    (ப-ரை.) அமிழ்து பொதி- அமுதத்தின் இனிமை நிரம்பிய, செ நா- செவ்விய நாவானது, அஞ்ச- அஞ்சும்படி, வந்த-முளைத்த, வார்ந்து இலங்கு- நேராகி விளங்குகின்ற, வை எயிறு- கூர்மையாகிய பற்களையும், சின்மொழி- சிலவாகிய சொற்களையும் உடைய, அரிவையை-தலைவியை,யான் பெறுகதில்- நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றாங்கு-பெற்றபின்பு, இ ஊர்- இந்த ஊரில் உள்ளார், அறிகதில்- அறிவாராக; பல்லோர்-பலர், மறுகில்- வீதியில், நல்லோள் கணவன் இவன் எனக் கூற-இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க, யாம் சிறிது நாணுகம்-நாம் சிறிது நாணுவேம்!

    (முடிபு) யான் பெறுக; ஊர் அறிக; பல்லோர் கூற யாம் நாணுகம்.

     (கருத்து) யான் மடல் ஏறுவேன்.

     (வி-ரை.) அமிழ்து என்றது எயிற்றில் ஊறிய நீரை. அமிழ்து பொதி எயிறு, வந்த எயிறு எனக் கூட்டுக. பற்கள் கூரியனவாதலின் நா அஞ்சியது;அஞ்சினமையின் அது சில மொழி கூறியது. அரிவை என்றது பருவம் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது, ‘‘செறியெயிற் றரிவை’’