பக்கம் எண் :


273


(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)
 141.    
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் 
    
செல்கென் றோளே யன்னை யெனநீ 
    
சொல்லி னெவனோ தோழி கொல்லை 
    
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த 
5
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை 
    
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் 
    
ஆரிரு ணடுநாள் வருதி 
    
சார னாட வாரலோ வெனவே. 

என்பது இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது [வு] மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

    (அது - அவ்விரவுக்குறி. அதுவும் என்ற உம்மை மிகையென்று தோற்றுகின்றது.)

மதுரைப் பெருங் கொல்லன்.

     (பி-ம்.)

1.’விளை தினை கடியாச’், ‘விழைதினை கடியச’்; 2. ‘செல்கின்றோளே’, ‘அன்னை சேணெனச’்; 3. ‘னெவனாந’்;5. ‘கொலைவலேற்றை’; 6. ‘படுமதரம’்; 8. ‘னாடநீ வாரலோ’.

     (ப-ரை.) தோழி---, சாரல் நாட - மலைப்பக்கத்தையுடைய நாட, கொல்லை - கொல்லையிலுள்ள, நெடு கைவல் மான் - நெடிய கையையுடைய யானையினது, கடுபகை உழந்த - கடிய பகையினால் வருந்திய, குறு கை இரு புலி கோள் வல் ஏற்றை - குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது, பசுகட் செநாய் - பசிய கண்ணையுடைய செந்நாய், படுபதம் பார்க்கும் - அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும், அரு இருள் நடுநாள் வருதி - வருதற்கரிய இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்; வாரல் என - அங்ஙனம் வருதலை ஒழிவாயாக எனவும், வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை, விளைதினை கடீஇயர் - விளைந்த தினையினிடத்துப் படாமற் கடியும் பொருட்டு, அன்னை - நம் தாய், செல்க என்றாள் - செல்வீராக