இளங்கீரந்தையார். (பி-ம்.) 1. ‘சீறாஅர்ச்’; 4. ‘குறுந்தோ’, ‘டலரும்’, ‘டலமரும்’; 5. ‘காரெனத் தேறாயாயின்’.
(ப-ரை.) செல்வம் சிறாஅர் - செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளுடைய, சிறு அடி பொலிந்த - சிறிய அடியின்கண் விளங்கிய, தவளை வாய - தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொலம் செய் கிண்கிணி காசின் அன்ன - பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற, போது ஈன்கொன்றை -பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை மரம், குருந்தோடு - குருந்த மரத்தோடு, அலம் வரும் - சுழலும், பெருதண் காலையும் - மிக்க தண்மையையுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் - கார் காலமன்றென்று நீ கூறுவாயாயின், இது கனவோ - இங்ஙனம் தோற்றுவது கனவோ? யான் வினவுவல் - யான் கேட்பேன்; கூறுவாயாக.
(முடிபு) கொன்றை அலம்வரும் காலையும் காரன்றென்றியாயின் கனவோ? யான் வினவுவல்.
(கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.
(வி-ரை.) பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணி யென்னும் ஆபரணத்தை யணியும் பொருள் மிகுதியை யுடையராதலின் ‘செல்வச் சிறாஅர்’ என்றாள். பொலிந்த கிண்கிணி, வாய கிண்கிணியென இயையும். கிண்கிணி பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொலஞ்செய் கிண்கிணி’ என்றாள். கிண்கிணி கொன்றைப் போதிற்கு உவமை; போது - மலரும்