பக்கம் எண் :


298


(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)
 155.   
முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் 
    
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் 
    
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் 
    
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 
5
மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு 
    
மாலை நனிவிருந் தயர்மார் 
    
தேர்வரு மென்னு முரைவா ராதே. 

என்பது தலைமகள் பருவங்கண்டு அழிந்து சொல்லியது.

உரோடகத்துக் கந்தரத்தனன் (பி-ம். ஒரோடகத்துக் காரத்தனார்.)

     (பி-ம்.) 6. தயர்வர்; 7. மென்முன், மென்னுமுன்னுரை.

     (ப-ரை.) முதை புனம் கொன்ற - பழங்கொல்லையை உழுத, ஆர்கலி உழவர் - மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய, விதை குறு வட்டி - காலையிலே விதைக்கும் பொருட்டு விதையை எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள், போது பொதுள - விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி, பொழுது வந்தன்று - மாலைப் பொழுது வந்தது, மெழுகு ஆன்று - அரக்காற் செய்த கருவில் அமைத்து, ஊது உலை பெய்த - ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய, பகுவாய் தெள் மணி - பிளவுபட்ட வாயையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகள், மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப - மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்து ஒலிக்கும்படி, சுரன் இழிபு - அருவழியைக் கடந்து, மாலை நனி விருந்து அயர்மார் - மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய, தேர் வரும் என்னும் உரை வாராது - தேர் வருகின்ற தென்று கூறும் உரை வந்திலது.

     (முடிபு) பொழுதோ வந்தன்று; விருந்தயர்மார் தேர் வருமென்னும் உரை வாராது.

     (கருத்து) மாலைக் காலம் வரவும் தலைவர் வந்திலர்.

     (வி-ரை.) முதை - பழமை, பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி உழுதுவிட்ட இடத்திற் பருவமறிந்து விதைக்கும் பொருட்டு உழவர் சென்றனர்; "நறைபடர் சாந்த மறவெறிந்து நாளால், உறையெதிர்ந்து வித்தியவூ ழேனல்" (திணைமா.1) என்பதனால் உணர்க. இதனால் மழைக்குரிய கார்ப்பருவம் வந்ததென்பது பெறப்படும்.