தோழி கருத்து. உசாவா - உசாவி ஆவன செய்யாத. கவலைமாக்கட் டென்றது, குறிப்புமொழி; சிறிதும் கவலையற்றவர்களென்னும் நினைவிற்று. தலைவியின் துயரறியும் அறிவின்மையின் மாக்களென்றாள்; மாக்களென்றது செவிலி முதலியோரை. பேதை யூரென்றது, ஊரிலுள்ளார் தலைவியின் நிலையுணராப் பேதைமை யுடையா ரென்றபடி.
தலைவி பருவம் வாய்த்தாளென்னும் காரணம்பற்றி இற்செறிக்கப்படுவதை இதன் முதற் பகுதியால் தோழி உணர்த்தினாள்;
| “முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின |
| தலைமுடி சான்ற தண்டழை யுடையை |
| அலமர லாயமொ டியாங்கணும் படாஅல |
| மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய |
| காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை |
| பேதை யல்லை மேதையங் குறுமகள் |
| பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென |
| ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி” (அகநா. 7) |
என்புழிப் பருவம் வந்த தலைமகளை இற்செறித்துக் காக்கும் செய்தி காணப்படும்.
கொல், ஏ: அசை நிலை.
இரண்டாவது கருத்து: நொதுமலர் வரைவு நேரின் இவள் எந்நிலையினளாவளெனச் சிறிதும் ஆராயாத மாக்களையுடையது என்று பொருள் கொள்க.
(மேற்கோளாட்சி) மு. தலைவனோடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாத வழித் தனது ஆற்றாமையால் தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தலைவி தானே கூறியது (தொல். களவு.21, இளம், 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. மகளிர் தழையுடை யணிதல்: குறுந். 125:3,
ஒப்புமைப் பகுதி 2. நுழை சிறு நுசுப்பு: குறுந். 71:3.4. கொம்மை வரிமுலை: ‘அகநா. 65:1); “கொம்மை வெம்முலை”, “கொம்மையார்ந்தன... விழுத்தகு முலைத்தடம்” (சீவக. 347, 2364.)
நகிலுக்குச் செப்பு: “முலையும், சூழி மென்முகஞ் செப்புட னெதிரின” (அகநா. 315:1-2); “தாமச் செப்பிணை: (சீவக. 171.)
5. யாங்காகுவள் கொல்: (குறுந். 337:6); “யாங்கா குவென்கொ லளியேன் யானே” (நற். 152:9); “யாங்கா குவங்கொல் பாண”, “யாங்கா குவள்கொ றானே” (அகநா. 14:13, 260:11.)
6-7. குறுந். 145: 4-5.
(159)
(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை வரைந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி வரைந்து கொள்வது யாங்ஙனம்?” என்று கவன்று கூறியது.)