ஓதலாந்தையார். (பி-ம்.) 3-4. ‘கொன்றை கானம்’.
(ப-ரை.) தோழி, வண்டுபட - வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, ததைந்த - செறிந்து மலர்ந்த, கொடி இணர் - நீட்சியை உடைய பூங்கொத்துக்களை, இடை இடுபு - தழைகளின் இடையே மேற்கொண்டு, பொன் செய் புனை இழை - பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கட்டிய - கோத்துக் கட்டிய, மகளிர் கதுப்பின் - மகளிருடைய கூந்தலைப் போல, தோன்றும் - கண்ணிற்குத் தோன்றுகின்ற, புது பூ கொன்றை - புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய, கானம் - காடானது, கார் என - இது கார்ப் பருவமென்று, கூறினும் - அம் மலர்களால் தெரிவிப்பினும், யான் தேறேன் - நான் தெளியேன்; ஏனெனின், அவர் பொய் வழங்கலர் - தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.