பக்கம் எண் :


50


மன்பொடும் வாராப் பொருளாக்கம், புல்லார் புரள விடல்” (குறள் . 755.) 3-4. உரவோர், மடவம்: “ உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்” (பதிற்.73:1.)

(20)
  
(தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.)
 21.   
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு 
    
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்  
    
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் 
    
கானங் காரெனக் கூறினும்  
5
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே. 

என்பது பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, ‘அவர் வரக்குறித்த பருவ வரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு!’ என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பறிந்த தலைமகள், “கானம், அவர் வருங்காலத்தை (பி-ம். வருங் கார் காலத்தை)க் காட்டிற்றாயினும் யான் இது கார் காலமென்று தேறேன், (பி-ம். தேறனென்றறிக) அவர் பொய் கூறாராகலின்’’ எனத்தான் (பி-ம். தலைமகள்) ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

ஓதலாந்தையார்.

     (பி-ம்.) 3-4. ‘கொன்றை கானம்’.

     (ப-ரை.) தோழி, வண்டுபட - வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, ததைந்த - செறிந்து மலர்ந்த, கொடி இணர் - நீட்சியை உடைய பூங்கொத்துக்களை, இடை இடுபு - தழைகளின் இடையே மேற்கொண்டு, பொன் செய் புனை இழை - பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கட்டிய - கோத்துக் கட்டிய, மகளிர் கதுப்பின் - மகளிருடைய கூந்தலைப் போல, தோன்றும் - கண்ணிற்குத் தோன்றுகின்ற, புது பூ கொன்றை - புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய, கானம் - காடானது, கார் என - இது கார்ப் பருவமென்று, கூறினும் - அம் மலர்களால் தெரிவிப்பினும், யான் தேறேன் - நான் தெளியேன்; ஏனெனின், அவர் பொய் வழங்கலர் - தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.