| கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர |
| இன்னே வருகுவர் தாய ரென்போள் |
| நன்னர் நன்மொழி கேட்டன மதனால் |
| நல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர் |
| முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து |
| வருத றலைவர் வாய்வது நீநின் |
| பருவர லெவ்வங் களைமா யோயென” (9-21.) |
என்னும் முல்லைப் பாட்டுப் பகுதியால் அறியலாகும்.
‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகியநம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.
அன்று ஏ; அசை நிலைகள். நம்வயின்: உருபு மயக்கம்.
ஒப்புமைப் பகுதி 1. விடர் முகை: குறுந். 239:2, 343:4; நற். 156:9, 158:5,261:8, 322:4, 332:5; ஐங். 395:2.
விடர்முகை யடுக்கம்: அகநா. 47:6; புறநா. 374:12.
2. கடன் பூணல்: “நிலையுயர் கடவுட்குக் கடம்பூண்டு” (கலி. 46:16.)
கைந்நூல் யாத்தல்: “செந்நூல் யாத்து” (முருகு. 231); “காப்புநூல் யாத்து” (தொல். புறத். 5, ந. மேற்.)
3. விரிச்சி நிற்றல்: “திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப” (நற். 40:4); “நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்” (புறநா. 280:6.)
4. உள்ளலும் உள்ளாம்: குறுந். 37:1, ஒப்பு.
5-6. தலைவரையின்றித் தலைவி யமையாமை: “தம்மின் றமையாநந்நயந் தருளி” (நற். 1:7); “தம்மின்றி, யாமுயிர் வாழு மதுகையிலேமாயின்” (கலி. 24:13-4); “தம்மல தில்லா நம்மிவ ணொழிய” (அகநா. 313:8.)
7. வல்லியோர்: குறுந். 266:4. (218)
(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக்கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.) 219. | பயப்பென் மேனி யதுவே நயப்பவர் |
| நாரி னெஞ்சத் தாரிடை யதுவே |
| செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே |
| ஆங்கட் செல்க மெழுகென வீங்கே |
5 | வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத் |
| தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் |
| கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. |