ஒளவையார். (ப-ரை.) அகவல் மகளே - தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, அகவல் மகளே - மனவு கோப்பு அன்ன - சங்கு மணியினால் ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய, நல்நெடு கூந்தல் - நல்ல நீண்ட கூந்தலை உடைய, அகவல் மகளே -, பாட்டுப் பாடுக - பாட்டுக்களைப் பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக -, அவர் நல் நெடு குன்றம் பாடிய பாட்டு - நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை, இன்னும் பாடுக - மீண்டும் பாடுவாயாக.
(முடிபு) அகவன் மகளே, பாடுக: இன்னும் பாடுக; குன்றம் பாடிய பாட்டை இன்னும் பாடுக.
(கருத்து) இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்.
(வி-ரை.) அகவல் மகள் - கட்டுவிச்சி; அகவல் - அழைத்தல்; ‘அதனை வழக்கினுள்ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப; அவை ... கட்டுங் கழங்குமிட்டுரைப்பார் கண்ணும் ... கேட்கப்படும்’ (தொல்.செய். 81 பேர்): ‘அகவிக் கூறலின் அகவலாயிற்று; ... அதனை வழக்கினுள் அழைத்தல் என்ப’ (தொல். செய்.81, ந.); தெய்வங்களை அழைத்துக் கூறும் இயல்புடையாளாதலின் இப் பெயர் பெற்றாள்; ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்வர் என்பது பற்றி’ (மதுரைக். 223,ந.)