பக்கம் எண் :


54


(தலைவியது வேறுபாட்டின் காரணத்தைச் செவிலித் தாய் முதலியோர் நெற்குறி பார்ப்பவளைக் கொண்டு ஆராய்ந்த காலத்தில் தோழி, “தலைவனுக்குரிய மலையை நீ பாடுவாயாக” என்று கூறும் வாயிலாக அத் தலைவியின் வேறுபாடு ஓர் ஆடவனால் உண்டாயிற்று என்பதைப் புலப்படுத்தியது).
 23   
அகவன் மகளே யகவன் மகளே 
    
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்  
    
அகவன் மகளே பாடுக பாட்டே 
    
இன்னும் பாடுக பாட்டே, அவர்  
5
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. 

என்பது கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.

    (கட்டு - முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் கட்டுவிச்சி காணும் குறி).

ஒளவையார்.

    (ப-ரை.) அகவல் மகளே - தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, அகவல் மகளே - மனவு கோப்பு அன்ன - சங்கு மணியினால் ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய, நல்நெடு கூந்தல் - நல்ல நீண்ட கூந்தலை உடைய, அகவல் மகளே -, பாட்டுப் பாடுக - பாட்டுக்களைப் பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக -, அவர் நல் நெடு குன்றம் பாடிய பாட்டு - நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை, இன்னும் பாடுக - மீண்டும் பாடுவாயாக.

    (முடிபு) அகவன் மகளே, பாடுக: இன்னும் பாடுக; குன்றம் பாடிய பாட்டை இன்னும் பாடுக.

    (கருத்து) இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்.

    (வி-ரை.) அகவல் மகள் - கட்டுவிச்சி; அகவல் - அழைத்தல்; ‘அதனை வழக்கினுள்ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப; அவை ... கட்டுங் கழங்குமிட்டுரைப்பார் கண்ணும் ... கேட்கப்படும்’ (தொல்.செய். 81 பேர்): ‘அகவிக் கூறலின் அகவலாயிற்று; ... அதனை வழக்கினுள் அழைத்தல் என்ப’ (தொல். செய்.81, ந.); தெய்வங்களை அழைத்துக் கூறும் இயல்புடையாளாதலின் இப் பெயர் பெற்றாள்; ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்வர் என்பது பற்றி’ (மதுரைக். 223,ந.)