பக்கம் எண் :


431


    (முடிபு) வாரார்; முயங்கார்; காமம் சேட்படக் கழிப.

    (கருத்து)தலைவர் என்பால் அன்பின்றி ஒழுகுகின்றார்.

    (வி-ரை.)ஆர - எனக்கு மன நிறைவு உண்டாகும்படி. ‘‘சுடலையையாரும் விரும்பார்; அயலார் சுடலையாயின் வெறுத்து ஒதுங்கிச் செல்வர்;அது போல என்னைக் கண்டும் விருப்பின்றி வெறுத்தொழுகினார்”என்றாள்.

    காமம் நாணை இழப்பதற்கும் நல்லறிவை இழப்பதற்கும் காரணமாதலின் நாணட்டு நல்லறிவு இழந்த காமம் என்றாள். விரைவில் நெடுந்தூரம் செல்லுதல் பற்றி வில்லுமிழ் கணையை உவமை கூறினாள். தலைவன் புறத்தொழுக்கினால் தலைவி தன் காமத்தை இழந்தாள். தலைவன்பால் விருப்பம் இல்லாள்போலக் கூறி வாயில் மறுத்தாள்.

    ‘நாணத்தை நீக்கி நல்லறிவு இழந்த தம் காமம் என்பால் அமையாமல் சேணிடத்தில் உள்ளாராகிய பரத்தையர்பால் அமைவதற்காக என்னைக் கண்டும் செல்லுவார்’ எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.

   
“நோதக் கன்றே காமம் யாவதும் 
   
 நன்றென வுணரார் மாட்டும் 
   
 சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே”          (குறுந். 78)  

என்பவாகலின், “நல்லறிவிழந்த காமம்” என்றாள்.

    மன், ஏ:அசை நிலைகள்.

    மேற்கோளாட்சி 1-2. சித்திர வண்ணம் வந்தது ( தொல். செய். 214, இளம்.)

    ஒப்புமைப் பகுதி 1. சேரி: குறுந். 258:1.

    1-4.குறுந், 203:1-5.

    4-5.நாணும் காமமும்: குறள், 1163, 1247.

    6.கணை வேகத்திற்கு: நற். 46:2: பெருங். 1. 48:8; சீவக. 502, 701.

(231)
  
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தலைவர் நம்மை நினைத்திலர்போலும்!” எனக் கவன்ற தலைவியை நோக்கி, “அவர் நினையாமலிரார்;வினை முற்றாமையின் வந்திலர்” என்று தோழி கூறியது.)
 232.   
உள்ளார் கொல்லோ தோழி யுள்ளியும் 
    
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ 
    
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை 
    
உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய 
5
யாஅ வரிநிழற் றுஞ்சும் 
    
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

     (வற்புறுத்தியது - துணிவுபடச் சொல்லியது.)