பக்கம் எண் :


59


(தலைவன் நெடுங்காலம் மணம்செய்து கொள்ளாமல் இருத்தல் பற்றி வருந்திய தலைவி, “தலைவர் அருள் பூண்டு என்னை வரைந்து கொண்டால் அன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர்” என்று கூறியது).
 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 

என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (வரைவு - மணம் செய்தல்).

கபிலர்.

    (பி-ம்) 2. ‘தானவன்’ 3. ‘காஅல’ 5. ‘முண்டுதாம்’

    (ப-ரை.) தோழி , தான் மணந்த ஞான்று - தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், யாரும் இல்லை - சான்றாவார் வேறு ஒருவரும் இலர்; தானே கள்வன் - தலைவனாகிய கள்வன் ஒருவன்றான் இருந்தனன்; தான் அது பொய்ப்பின் - அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுறவினின்றும் தப்பினால், யான் எவன் செய்கு-நான் யாது செய்ய வல்லேன்! ஒழுகு நீர்ஆரல் பார்க்கும் - ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும், தினைதாள் அன்ன- தினையின் அடியைப் போன்ற, சிறு பசு கால - சிறிய பசிய கால்களை உடைய, குருகும் உண்டு - நாரையும் இருந்தது.

     (முடிபு) தலைவன் மணந்த ஞான்று யாரும் இல்லை; தானே; தான் அது பொய்ப்பின் எவன் செய்வேன்! குருகும் உண்டு.

     (கருத்து) தலைவன் தான் கூறியபடி இன்னும் வரைந்து கொண்டானல்லன்.

    (வி-ரை.) யாருமென்றது அறிவுடையோரை. தானே: ஏகாரம் பிரிநிலை. பிறர் அறியாவாறு வந்து தன் நலத்தைக் கவர்ந்து கொண்டு சென்றவ னாதலின் கள்வன் என்றாள். ‘அது’ என்றது, ‘நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ என்றும், ‘நின்னை விரைவில் மணந்து கொள்வேன்’ என்றும் கூறிய சூளுறவை (குறிஞ்சிப். 208-10, உரை); அது : நெஞ்சறி சுட்டு. பார்க்கும் - உண்ணும் பொருட்டுக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நிற்கும்.