பக்கம் எண் :


61


    ஒப்புமைப் பகுதி 1. தலைவனைக் கள்வனென்றல் (குறுந். 318:8); (நற். 28:4); “இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது, நெஞ்ச நிறையழித்த கள்வன்” (முத். 102); “காடுடைய சுடலைப் பொடி பூசி யென்னுள்ளங்கவர் கள்வன்” (தே.திருஞா.)

    2. பொய்த்தல்: குறள். 293. தலைவன் பொய்த்தல்: “பொய்வ லாளன்” (குறுந். 30:2); “இவன், பொய்பொதி கொடுஞ் சொல்” (நற். 200: 10-11); “தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை” (கலி. 41:19-20); “நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன, பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே” (அகநா. 286:15-7).

    1-2. தலைவன் சூளுறவு செய்தலும் அதனைப் பொய்த்தலும்: “பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட், பிழையா வஞ்சினஞ் செய்த, கள்வனுங் கடவனும் புணைவனுந் தானே” (குறுந். 318:6-8).

    5. குருகுமுண்டு: குறுந். 26:8; அகநா. 320:13-4; திவ். பெரிய திரு. 9.3:4. 4-5 களவுக் காலத்துப் பயிலும் இடத்தில் நாரை இருத்தல்: “இரைதேர் வெண்குரு கல்லதி யாவதும், துன்னல் போ கின்றாற் பொழிலே” (குறுந்.113:3-4) ஆரல் பார்க்கும் குருகு: (குறுந்.103:3. 114:4-5); “இரைதேர் நாரை”, “இரை தேருந் தடந்தா ணாரை” (நற்.35:6, 91:4); “நாரைக ளாரல் வார” (தே.திருநா. திருநனிபள்ளி).

    3-5. நாரையின் காலுக்குத் தினைத்தாள்: “தினைத்தா ளன்ன செங்கா னாரை சேருந் திருவாரூர்” (தே. சுந்தர.).

(25)
  
(தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனொடு நட்புப் பூண்டாள்; அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.)
 26.    
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை  
    
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை  
    
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்  
    
தகாஅன் போலத் தான்றீது மொழியினும் 
5
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே 
    
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் 
    
வரையாடு வன்பறழ்த் தந்தைக் 
    
கடுவனு மறியுமக் கொடியோ னையே. 

என்பது நற்றாயுஞ் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, இஃது எற்றினானாயிற்றென்று (பி-ம். வேறுபாடு கண்டார் எதனானாயிற்று என்று) கட்டுவிச்சியை வினவிக்கட்டுக் காண்கின்ற காலத்துத் தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக் கேட்டுத் தோழி அறத்தொடு நின்றது.