பக்கம் எண் :


480


    2-3. நுதல் காந்தளின் மணம் வீசல்: "சினையொண் காந்தணாறு நறுநுதல்" (அகநா. 338:7.)

    4. பல்லிதழ் மழைக் கண்: குறுந். 5:5, ஒப்பு.

    5-6. "அடுநை யாயினும் விடுநை யாயினும், நீயளந் தறிதிநின் புரைமை" (புறநா. 36:1-2.) 6-7. வாய்போற் பொய்ம்மொழி; அகநா. 3:14.

    7. தலைவனது நல்ல நெஞ்சம்: குறுந். 265:6.

(259)
  
(தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி, "நன்னிமித்தங்கள் உண்டாகின்றன; ஆதலின் தலைவர் வந்து விடுவர்; நீ ஆற்றுக" என்று தோழி கூறியது.)
 260.   
குருகு மிருவிசும் பிவரும் புதலும் 
    
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே 
    
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும் 
    
வருவர்கொல் வாழி தோழி பொருவார் 
5
மண்ணெடுத் துண்ணு மண்ணல் யானை 
    
வண்டேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக் 
    
கன்றி லோரா விலங்கிய 
    
புன்றா ளோமைய சுரனிறந் தோரே. 

என்பது அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

கல்லாடனார்.

    (பி-ம்.) 2. ‘வாய்ஞெகிழ்ந்’; 6. ‘வழையமரடுக்கத்துச்’, ‘வழைமலரடுக்கத்துச்’; 7. ‘கன்றி லேரா’.

    (ப-ரை.) தோழி-, குருகும் இருவிசும்பு இவரும் - நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலும் - புதலிலுள்ள போதுகளும், வரி வண்டு ஊத - கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால், வாய் நெகிழ்ந்தன - மலர்ந்தன; சுரி வளை பொலிந்த தோளும் - சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும், செற்றும் - நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின், பொருவார் - பகைவரது, மண் எடுத்து உண்ணும் - பூமியைக் கொண்டு நுகரும், அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானையையும், வள்தேர் - வளவிய தேரையுமுடைய, தொண்டையர் - தொண்டை மான்களுக்குரிய, வழை அமல் அடுக்கத்து - சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில், கன்று இல்