பக்கம் எண் :


482


(இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் சிறைப்புறத்தே இருப்ப அதனை அறிந்த தலைவி தோழிக்குச் சொல்வாளாகி, "தலைவரது வரவை எதிர்நோக்கி வருந்தி இரவெல்லாம் துயின்றிலேன்" என்று கூறி, விரைவில் வரைந்து கோடலே நன்றென்பதைப் புலப்படுத்தியது.)
 261.   
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய 
    
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாட் 
    
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் 
    
நள்ளென் யாமத் தையெனக் கரையும் 
5
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண் 
    
துஞ்சா வாழி தோழி காவலர் 
    
கணக்காய் வகையின் வருந்தியென் 
    
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. 

என்பது இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

கழார்க் கீரன் எயிற்றி (பி-ம். கிழார்க் கீரனெயிற்றி.)

    (பி-ம்.) 1. ‘படுமழை’; 2. ‘விற்பெயற்’, ‘விற்பெயர்க்’; 5. ‘பொழுதினாணு’;8. ‘விழுமந்தானே’.

    (ப-ரை.) தோழி-, காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி - நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி, நெஞ்சு புண் உற்ற விழுமத்தான் - நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக, பழமழை பொழிந்தென - பழைய மழை பொழிந்ததாக, பதன் அழிந்து உருகிய - செவ்வி அழிந்து ஒழுகிய, சிதடு காய் எண்ணின் - உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய, சில் பெயல் கடைநாள் - சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில், சேற்று நிலை முனைஇய - சேற்றின்கண் நிற்றலை வெறுத்த, செ கண் காரான் - சிவந்த கண்ணை உடைய எருமை, நள்ளென் யாமத்து - இருள் செறிந்த நடு இரவின் கண், ஐ என கரையும் - ஐயென்று ஒலிக்கும், அஞ்சு வரு பொழுதினானும் - அச்சம் உண்டாகின்ற காலத்திலும், என் கண் - என்னுடைய கண்கள், துஞ்சா - தூங்காவாயின.

    (முடிபு) தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.

    (கருத்து) தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.