பக்கம் எண் :


489


    4-5. தலைவன் கேண்மை கெடாதது: குறுந். 170:4-5, 313:4-5. தலைவியின் உடல் வேறுபாடுற்றும் தலைவன் கேண்மை மெலியாமை; குறுந். 90:6-7, ஒப்பு.

(264)
  
(வரைபொருட்குத் தலைவன் பிரிந்தானாக, அவன் வரையாது பிரிந்தான் என வருந்திய தலைவிக்குத் தலைவன் பிரிந்த காரணங் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
 265.   
காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது 
    
வண்டுவாய் திறக்கும் பொழிதிற் பண்டும்  
    
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட  
    
கடனறி மாக்கள் போல விடன்விட் 
5
டிதழ்தளை யவிழ்ந்த வேகல் வெற்பன் 
    
நன்னர் நெஞ்சத்தன் றோழி நின்னிலை 
    
யான்றனக் குரைத்தனெ னாகத் 
    
தானா ணினனிஃ தாகா வாறே. 

என்பது வரையாது பிரிந்த இடத்து, அவர் பிரிந்தது (பி-ம். பிரிந்த காரணம்) நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தானெனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கருவூர்க் கதப்பிள்ளை.

    (பி-ம்.) 3. ‘சான்றோர் கண்ட’.

    (ப-ரை.) தோழி-, காந்தள் அம் கொழு முகை - காந்தளினது அழகிய கொழுவிய அரும்பை, காவல் செல்லாது -தானாக மலரும் வரையில் காத்து நில்லாமல், வண்டு -வண்டுகள், வாய் திறக்கும் பொழுதில் - மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், பண்டும் தாம் அறி செம்மை சான்றோர்கண்ட - முன்பும் தாம் அறிந்த நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட, கடன் அறிமாக்கள் போல - எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரைப் போல, இடன் விட்டு - இடம் கொடுத்து, இதழ் தளை அவிழ்ந்த - இதழ்கள் பிணிப்பவிழ்ந்த, ஏகல் வெற்பன் - உயர்ச்சியை உடைய மலைகளை உடைய தலைவன், நின் நிலை - நினது நிலையை, யான் தனக்கு உரைத்தனென் ஆக - நான் தனக்குச் சொன்னேனாக, இஃது ஆகாவாறு - இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, நாணினன் - நாணத்தை அடைந்தான்; நன்னர் நெஞ்சத்தன் - அவன் நின்னை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.