பக்கம் எண் :


514


(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை ஆற்றல் வேண்டும் என்று தோழி வற்புறுத்திய பொழுது தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.)
   
 279.   
திரிமருப் பெருமை யிருணிற மையான் 
    
வருமிட றியாத்த பகுவாய்த் தெண்மணி 
    
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும்  
    
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ 
5
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல் 
    
துகள்சூழ் யானையிற் பொலியத்தோன்றும் 
    
இரும்பல் குன்றம் போகித் 
    
திருந்திறைப் பணைத்தோ ளுள்ளா தோரே. 

என்பது வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை மருதன் இளநாகனார்.

    (பி-ம்.) 5. ‘மழைகெழு’, ‘மறைந்த’; 7. ‘அரும்பல் குன்றம’், ‘போக்கித’்.

    (ப-ரை.) தோழி , மழை கழூஉ மறந்த மாஇரு துறுகல் -மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய பொற்றைக் கல், துகள் சூழ் யானையின் - புழுதி படிந்த யானையைப் போல, பொலிய தோன்றும் - விளங்கத் தோன்றுகின்ற, இரு பல்குன்றம் போகி - பெரிய பல மலைகளைக் கடந்து சென்று, திருந்து இறை பணைதோள் உள்ளாதோர் - இலக்கணத்தால் திருந்திய சந்துகளை உடைய மூங்கிலைப் போன்ற என் தோள்களை நினையாதோர், திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன் - முறுக்கிய கொம்பையும் இருள் நிறத்தையும் உடைய எருமையினது, வரு மிடறு யாத்த - வளர்கின்ற கழுத்தின்கண் கட்டப்பட்ட, பகு வாய் தெள் மணி - பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது, புலம்பு கொள் யாமத்து - தனிமையைக் கொண்ட நடு இரவில், இயங்கு தொறு - அவ்வெருமை நடக்கும் தோறும், இசைக்கும் - ஒலிக்கின்ற, இது பொழுது ஆகவும் - இக் காலம் தாம் வருதற்குரிய செவ்வியாக இருப்பவும், வாரார் - அவர் வாராராயினர்.

    (முடிபு) போகி உள்ளாதோர், வாரார்.

    (கருத்து) தலைவர் வருதற்குரிய செவ்வி இஃதாக இருந்தும் அவர் வந்திலரென ஆற்றேனாயினேன்.