பக்கம் எண் :


517


     2. நெஞ்சு பிணிக் கொண்ட தலைவி "கொடிச்சி கையகத்ததுவேபிறர், விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே" (நற். 95:9-10.)

     அஞ்சிலோதி: குறுந். 211:1, ஒப்பு.

     3. குறுமகள்: குறுந். 89:7, ஒப்பு.

(280)
  
(தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக அவளை நோக்கி, "தலைவர் கொடிய பாலை நிலத்தைக்கடந்தனரோ என்னும் வருத்தத்தால் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
 281.   
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்  
    
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்டோட் 
    
டத்த வேம்பி னமலை வான்பூச் 
    
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் 
5
குன்றுதலை மணந்த கானம் 
    
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. 
    

என்பது பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு வற்புறுப்பாட்குக் தோழிகிழத்தி உரைத்தது.

குடவாயிற் கீரத்தன்.

     (பி-ம்.) 2-3. ‘வெண்டோ டத்த’.

     (ப-ரை.) செ இழை - சிவந்த பொன் அணியை உடையாய், நமர் - நம் தலைவர், வெள் மணல் பொதுளிய - வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த, பசு கால் கருக்கின் - பசிய அடியையும் கருக்கையும், கொம்மை போந்தை - திரட்சி யையும் உடைய பனையினது, குடுமி வெள் தோடு - உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையின் கண் வைத்த, அத்த வேம்பின் - பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தினது, அமலை வான் பூ - நெருக்கத்தை உடைய வெள்ளிய மலரை, சுரி ஆர் உளைதலை பொலிய சூடி - சுழித்தல் ஆர்ந்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு, குன்றுதலை மணந்த கானம் - மலைகளோடு சேர்ந்த காட்டை, சென்றனர் கொல் - கடந்து சென்றனரோ?

     (முடிபு) சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?

     (கருத்து) தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?

     (வி-ரை.) குடுமி - உச்சி. உச்சியில் உள்ளதென்றும் வெண்ணிறம்உடையது என்றும் சிறப்பித்தமையால் தோடு, குருத்தோலை ஆயிற்று.