பக்கம் எண் :


524


     ‘அறவனாயினும் - தான் வரைவொடு வருதலை ஏற்றுக் கொண்டால் தலைவன் அறநெறி வழி வரைந்து கொள்ளினும், அல்லனாயினும் - அங்ஙனம் ஏற்றுக் கொள்ளாரேல் மன வலி மிக்கு நின்னை உடன்அழைத்துச் சென்றானேனும்' என்று உரைத்தலும் ஆம். இக் கருத்தை, தலைவனைச் சுற்றத்தார் ஏற்றுக் கொள்வாரோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்ததாகக் கொள்க.

     கொன்: இலைக்கு அடையாக்கி எலி, அணில் முதலியவற்றிற்கு அச்சத்தைத் தரும் ஈத்திலை என்று பொருள் உரைப்பினும் இயையும்;

  
"வரிப்புற வணிலொடு கருப்பை யாடா  
  
 தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்  
  
 வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தகர்  
  
 ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை"     (பெரும்பாண். 85-8) 

என்பது காண்க.

     குரம்பை - சிறு குடில். இன்னாமை தலைவி திறத்தமைந்தது. இன்னாது: வினையெச்சம்: "இன்னா துறைவி", "இன்னா துயங்கும்"(அகநா. 164:10;270:14.)

     ஒப்புமைப் பகுதி 1-3. மலருக்கு யானையின் முகப்புண்: கலி. 48:1-6.

     காந்தள் மலருக்கு யானையின் முகத்துவரி: "நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப், போதுபொதி யுடைந்த வொண்செங் காந்தள்" (நற். 176:5-6.) துறுகல்லிற்கு யானை: குறுந். 13:1-2, ஒப்பு.

     4. அறவன், அல்லன்: புறநா. 44:11-3, 390:1-2.

     7. இலைக்குரம்பை: பெரும்பாண். 88; மதுரைக். 310.

     8. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.

     (பி-ம்.) 6. வாள்வெள்ளருவி: ஐங். 314:3, கலி. 42:11.

(284)
  
(தலைவன் கூறிச் சென்ற பருவம் கண்டு வேறுபட்ட தலைவியைநோக்கித் தோழி வற்புறுத்தினாளாக, அவளுக்கு, "தலைவர் கூறிய பருவம் இதுவே. யான் ஒவ்வொரு நாளும் அவர் வரவை நோக்கி நிற்கின்றேன்; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
  285.    
வைகல் வைகல் வைகவும் வாரார்  
    
எல்லா வெல்லை யெல்லையுந் தோன்றார் 
    
யாண்டுளர் கொல்லோ தோழி யீண்டிவர் 
    
சொல்லிய பருவமோ விதுவே பல்லூழ் 
5
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற 
    
விமைக்க ணேதா கின்றோ ஞெமைத்தலை 
    
ஊனசைஇ யொருபருந் திருக்கும் 
    
வானுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 
    

என்பது பருவம் கண்டு வேறுபட்ட இடத்து வற்புறுத்தும் தோழிக்குவன்புறை (பி-ம். வன்பொறை) எதிர் அழிந்து தலைமகள் சொல்லியது.