பக்கம் எண் :


564


(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனை நோக்கி, “நீ எம்மை அகன்றுஎமக்கு இன்னாதன செய்யினும் யாம் நினக்கு அன்புடையேமாகிஒழுகுவேம்” என்று தோழி கூறி வாயில் நேர்ந்தது.)
 309.    
கைவினை மாக்கடஞ் செய்வினை முடிமார் 
    
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட 
    
நீடின வரம்பின் வாடிய விடினும் 
    
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது 
5
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 
    
நின்னூர் நெய்த லனையேம் பெரும 
    
நீயெமக், கின்னா தனபல செய்யினும் 
    
நின்னின் றமைதல் வல்லா மாறே. 

என்பது பரத்தையிற் பிரிந்துவந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

உறையூர்ச் சல்லியன் குமாரன்.

    (பி-ம்) 2. வாசங் கீழ்ப்ப; 3. நடன வரம்பின் வாடி விடினும், வாடவிடினும்; 7. கின்னா கியபல , 8. வல்லா மாற்றே.

    (ப-ரை.) பெரும - தலைவ, நீ எமக்கு இன்னாதனபல செய்யினும் - இன்னாதனவாகிய பல செயல்களைச்செய்தாலும், நின் இன்று அமைதல் வல்லாமாறு - நின்னைஇன்றிப் பொருந்துதற்கு வன்மையில்லாமையின், யாம், கைவினை மாக்கள் - தொழில் புரியும் உழவர், தம் செய்வினை முடிமார் - தமது செய்தொழிலை முடிப்பாராகி,சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்பட - வண்டு உண்ணும்படிமலர்ந்த மலரின் மணம் கீழே படும்படி, நீடின வரம்பின்வாடிய விடினும் - நீண்ட வரப்பிலே வாடும்படி விட்டாலும், கொடியர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது - இவர்கொடியர்; இந்நிலத்தை நீங்கித் தங்குவே மென்றெண்ணாமல், பெயர்த்தும் கடிந்த செறுவில் - மீட்டும் தம்மைநீக்கிய வயலினிடத்தே, பூக்கும் - மலர்கின்ற, நின் ஊர்நெய்தல் அனையேம் - நின் ஊரின்கண் உள்ள நெய்தலைப்போன்ற தன்மையையுடையே மாயினேம்.

     (முடிபு) பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறுநெய்தல் அனையேம்.

     (கருத்து) நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.