பக்கம் எண் :


599


(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, "தலைவர் சென்றநாட்டில் என்னை வருத்தும் மாலையும் புலம்பும் இலவோ?" என்றுதோழிக்குக் கூறியது.)
 330.    
நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்  
    
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட  
    
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்  
    
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ  
5   
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்  
    
புன்கண் மாலையும் புலம்பும்  
    
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.  

என்பது பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.

கழார்க்கீரனெயிற்றியன் (பி-ம். கிழாற்கீரனெயிற்றியன், கிழார்க்கீரன்.)

     (பி-ம்.) 1. ‘புலைச்சி’, ‘புலத்தி’, 2. ‘தண்ணயத்’, 3. ‘பரூஉக்கிரி’, 7. ‘நாடே’.

     (ப-ரை.) தோழி--, நலம் தகை புலைத்தி - நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி, பசை தோய்த்துஎடுத்து - கஞ்சியிலே தோய்த்து எடுத்து, தலைபுடை போக்கி - முதல் தப்பலைத் தப்பிவிட்டு, தண் கயத்து இட்ட - தண்ணிய நீர்நிலையிலே போகட்ட, நீரில் பிரியா பரூஉதிரிகடுக்கும் - அந்நீரிலே பிரியாத பருத்த ஆடையின் முறுக்கைஒக்கும், பெரு இலை பகன்றை பொதி அவிழ் வால் பூ - பெரிய இலையையுடைய பகன்றையினது கூம்பு மலர்ந்தவெள்ளிய மலர், இன்கடு கள்ளின் - இனிய கடுமையாகியகள்ளைப் போல, மணம் இல கமழும் - நறு நாற்றமில்லாதனவாகி நாறுகின்ற, புன்கண் மாலையும் - துன்பத்தைத்தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர்சென்ற நாட்டு - அத்தலைவர் நம்மைப் பிரிந்து சென்றநாட்டிலே, இன்று கொல் - இல்லையோ.

     (முடிபு) தோழி, மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?

     (கருத்து) மாலைக்காலமும் தனிமையும் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன.

     (வி-ரை) தகை - தகுதியுமாம். புலைத்தி - வண்ணாத்தி. அவள்ஆடையைப் பசையில் தோய்த்தல் வழக்கம்;

  
"பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைத் தூட்டிய 
  
 பூந்துகில்"                    (அகநா. 387:6-7) 

பகன்றையின் பூவை,