பக்கம் எண் :


605


(“தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தால் நீ ஆற்றும் வன்மைஉடையையோ?” என்று வினவிய தோழிக்கு, “அவன் பிரியின் என்உயிர் போம்” என்று தலைவி கூறியது.)
 334.   
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ 
    
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் 
    
பனிபுலந் துறையும் பல்பூங் கானல் 
    
விரிநீர்ச் சேர்ப்ப னீப்பி னொருநம் 
5
இன்னுயி ரல்லது பிறிதொன் 
    
றெவனோ தோழி நாமிழப் பதுவே. 

என்பது “வரைவிடை ஆற்றகிற்றியோ?” என்ற தோழிக்குக் கிழத்திசொல்லியது

இளம்பூதனார்.

    (பி-ம்) 1. ‘பைந்தோடு’, ‘செவ்வாய்ப் பெருந்தோட்’ 4. ‘இருநீர்ச்’,‘பெருநீர்ச்’.

    (ப-ரை.) தோழி--, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையையுடைய காக்கையினது, செ வாய் பெருதோடு -செவ்விய வாயையுடைய பெரிய தொகுதி, எறி திரைதிவலை ஈர்ம்புறம் நனைப்ப - வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைக்க, பனி புலந்து -அக்குளிரை வெறுத்து, உறையும் பல் பூ கானல் - தங்குதற்குஇடமாகிய பல மலர்களையுடைய சோலையையுடைய,விரி நீர் சேர்ப்பன் நீப்பின் - அகன்ற கடற்கரையையுடையதலைவன் பிரிந்தால், நாம் இழப்பது - நாம் இழக்கும்பொருள், நம் இன் உயிர் அல்லது - நமது இனிய உயிரையன்றி, பிறிது ஒன்று எவன் - வேறொன்று யாது?

     (முடிபு) தோழி, சேர்ப்பன் நீப்பின் நாம் இழப்பது உயிரல்லதுபிறிதொன்று எவன்?

     (கருத்து) தலைவனது பிரிவை யான் ஆற்றேன்.

     (வி-ரை.) சிறுவெண்மை யென்றது கழுத்திலுள்ள நிறத்தை.காக்கையின் உள்வாய் சிவந்திருக்கும்.

     ‘நாமிழப்பது பிறிதொன்றெவன்?’ என்றது, தோழிபாற் செறலைப்புலப்படுத்தியது; “நம்மிடம் இழப்பதற்கு உயிரையன்றி வேறு என்னபொருள் இருக்கிறது?” என்று வினாவியது, ‘இதனை நீ அறிந்தும்அறியாள்போல் என்னை வினவினை’ என்னும் நினைவிற்று.

     எவனோ : ஓ அசை நிலை. ஏ : அசை நிலை.