பக்கம் எண் :


78


    கொல்: ஐயம். ஓவும் ஏயும் அசை நிலை.

    தோழியை நோக்கி இங்ஙனம் தலைவி கூறியவற்றால் அவளது உடம்பாட்டுக் குறிப்பை அறிந்த பாணன் அதனைத் தலைவன்பாற் சென்று உணர்த்த அவன் வந்து தலைவியோடு அளவளாவுதல் இதற்குப் பயன்.

    (மேற்கோளாட்சி) 1. தோழியைத் தலைவி அன்னை என்றது (தொல். பொருளியல், 50, இளம், 52, ந.). ஐகாரவீற்றுப் பொதுப் பெயர் விளிவேற்றுமையில் ஆயென்று வந்தது (நன். 305, மயிலை, 306, சங்.). 2. ஊர்மன்று: வழக்கின்கண் இனமில்லாத அடைமொழி வந்தது (நன்.400, மயிலை.)

    மு. பாணன் வாயிலாக வந்துழித் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, இளம்.); பாணன் சொல் வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. தோழியை அன்னையென்றது: குறுந்.150:5.

    2. பாணர் மன்றத்திருத்தல்: “மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்” (மலைபடு. 492); “மன்றம் போந்து மறுகுசிறை பாடும், வயிரிய மாக்கள்”, “வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ. மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்”, “மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக். கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும், அகவலன்” (பதிற். 23:5-6, 29:8-9, 43:26-8); “மன்றுபடு பரிசிலர்” (புறநா. 135:11) 2-3. மன்றத்துப் பாணர் இருத்தலும் ஊண் பெறுதலும்; “இரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக், கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு” (புறநா.34:12-4).

    4. பாணர் விருந்தை நோக்கிச் செல்லல்; “அறாஅ யாணரகன்றலைப் பேரூர்ச், சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந. 1-3)

(33)
  
(தலைவியை வரைந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் வரைவானென்னும் செய்தியைக் கேட்டு இதுகாறும் உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவன் வரைவொடு வந்தமையைத் தலைவிக்கு உணர்த்தியது.)
 34.   
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்  
    
தமிய ருறங்குங் கௌவை யின்றாய் 
    
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே  
    
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ 
5
டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்  
    
குட்டுவன் மரந்தை யன்னவெம்  
    
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.