பக்கம் எண் :


81


    குழல் விளங்கு ஆய்நுதல் என்றது, மகளிர் குழலை வகுக்கும் ஐந்து வகைகளில் ஒன்றாகிய பனிச்சையைத் தன்மேலே பெற்று விளங்கும் நெற்றி என்றவாறு. அது முன்னுச்சியிலே அமைக்கப்படுவது; அளகம் என்பதும் அது; “ஓதி யொண்ணுதல்” (ஐங். 67:5); “அளக வாணுதல்” (கம்ப. மந்தரை. 86), “நுதலளகபாரம்” (தக்க.25) என்று அது நுதலோடு சார்த்தி வழங்கப்படுதல் காண்க. குழலை நுதலுக்கு அடையாக்கினமையின், குழலுக்கும் கிழவர் என்பது கொள்க. இங்ஙனமே தலைவியின் உறுப்புகளுக்கு உரிமை உடையவனாகத் தலைவனைக் கூறும் வழக்கு, “தோட்கிழவன்” (கலி. 41:42) என்பது முதலியவற்றால் அறியப்படுகின்றது. முன்பு வரைபொருளுக்குத் தலைவன் பிரிந்த காலத்தில் குழலையும், நுதலையும் நீவிச் சென்றானாதலின் அவ்வுரிமையை நினைந்து, ‘குழல்விளங்காய் நுதற் கிழவன்’ என்றாள் (கலி. 4:19). அவனே: ஏகாரம் தேற்றம்.

    (மேற்கோளாட்சி)     மு.தலைவனுக்குத் தலைவியின் தமர் வரைவுடம்பட்டதனைத் தலைவி விரும்பியது; ‘தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் சொற்களால் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்திருப்பார் உறக்கங் காரணமாக எழுந்த கௌவையைக் கேளாது வரைந்தெய்திய மாற்றத்தைக் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்’ (தொல். களவு.16, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. “ஒறுப்ப வோவலை நிறுப்ப நில்லலை” (அகநா.342:1).

    5. அட்ட மள்ளர் ஆர்த்தல்: (குறுந்.328:5-8, 393:4-6); “ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து” (பெரும்பாண்.419; மலைபடு.386); “வென்றிகொள் வீர ரார்ப்பு”, “நேரா வெழுவ ரடிப்படக் கடந்த, ஆலங்கானத் தார்ப்பு”, “பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலியறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பு” (அகநா.36:23, 209:5-6, 246:12-4): “வம்ப மள்ளரை ... அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக், கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை” (புறநா.77:9-12). 6.குட்டுவன்: நற்.105:7; அகநா.212:16. மரந்தை: நற். 35:7; பதிற்.90:28; அகநா.127:6, 376:18; முத்.82,105

(34)
  
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று வினாவிய தோழிக்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்ட என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின்மேலேற்றித் தலைவி உரைத்தது.)
 35.    
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு 
    
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன 
    
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ 
    
நுண்ணுறை யழி துளி தலைஇய 
5
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 

என்பது பிரிவிடை மெலிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது.

கழார் (பி-ம். கிழார்க்) கீரனெயிற்றி.)