பக்கம் எண் :


636


நின்னால் வெறுத்தற்குரிய மாயினேம்’ என்னும் நினைவுப்பற்றிக் கூறப் பட்டன; ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்னும் பழமொழி இங்கேநினைத்தற்குரியது.

     ‘நீ முன்பு எம் அஞர் களைந்தாய்’ என்றது தலைவனது பழையஅன்பை நினைவுறுத்தியபடி.

     கொடுமோ: மோ முன்னிலையசை. எம்மே: ஏ அசைநிலை.

    (மேற்கோளாட்சி) மு. தேன் முன் இனிதாய்ப் பின் தீங்கு விளைக்கும் இயல் பினது (சீவக. 222, ந.) 5. கடியென்னும் உரிச்சொல் அச்சப் பொருளில் வந்தது (தொல்.உரி. 87, தெய்வச்.)

    மு. தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கண் தலைவி கூறியது(தொல். கற்பு. 6, இளம்.); பரத்தையிற்பிரிவால் தலைவர்க்கும் தலைவி யர்க்கும் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக்கருதித் தோழி கூற்று நிகழ்த்துங் காலத்து அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக்கண்ணே தனக்கு வருத்தந் தோன்றிற்றாகக் கூறுதலும் உரித்து; ‘இதனுள் இல்லறத்தினை நீ துறந்தாயாயின் எம்மை எம்மூர்க்கண்ணே விடுகவெனத் தனக்கு வருத்தந் தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க’ (தொல். பொருள், 32, ந).

    ஒப்புமைப் பகுதி 1. நீராடிற் கண் சிவத்தல்: “அருவி தாஅய் .... பனிபொரு மழைக்கண் சிவப்ப”, “நீத்தம் .... அரிமதர் மழைக்கண் சிவப்ப .... ஆடுகம் வம்மோ” (அகநா. 278:7-11, 312:4-8.)

    2. தேன் புளித்தல்: ‘தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச் சுவை நிகழுமாறுபோல’ (சீவக. 2382, ந.) 3-4. பெருங். 2. 16:50-51.

    5. கடும்பாம்பு வழங்குந்தெரு: “அருவரை யுள்ளதாஞ் சீறூர் வருவரையுள், ஐவாய நாகம் புறமெல்லாம்” (திணைமா. 13).

(354)
  
(மழை பெய்யும் நடுயாமத்தில் தலைவன் வந்தானாக, “இந்த இருளில் நீ எங்ஙனம் வழி தெரிந்து எம் ஊரைத்தேடி வந்தனை?” என்று அவனுக்குத் தோழி கூறியது.)
 355.   
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே 
    
நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலையே 
    
எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று 
    
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் 
5
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப 
    
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி 
    
யாங்கறிந் தனையோ நோகோ யானே. 

என்பது இரவுக்குறி வந்த (பி-ம். நேர்ந்த) தலைமகற்குத் தோழிநொந்து (பி-ம். நேர்ந்து) கூறியது.

கபிலர். (பி-ம். பரணர்.)