பக்கம் எண் :


640


(வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவியை நோக்கி, “நின் தோள்கள் தலைவனோடு நீ நட்புச் செய்யாததன்முன் நல்லனவாக இருந்தன” என்று தோழி கூறியது.)
 357.   
முனிபட ருழந்த பாடி லுண்கட்  
    
பனிகால் போழ்ந்து பணையெழின் ஞெகிழ்தோள்  
    
மெல்லிய வாகலின் மேவரத் திரண்டு  
    
நல்ல வென்னுஞ் சொல்லை மன்னிய  
5
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்  
    
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை  
    
மீன்படு சுடரொளி வெரூஉம்  
    
வான்றோய் வெற்பன் மணவா வூங்கே.  

என்பது தோழி, கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச்சொல்லியது.

கபிலர்.

     (பி-ம்.) 5. ‘சிறுதினைக் காக்குஞ்’ 7. ‘மின்படு’.

     (ப-ரை.) பணை எழில் ஞெகிழ் தோள் - மூங்கிலினதுஅழகு நெகிழ்ந்த நின் தோள்கள், முனி படர் உழந்த - வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய, பாடு இல் உண் கண் பனி - துயிலுதலில்லாத மையுண்ட கண்களில் உண்டாகும் துளி, கால் போழ்ந்து - குறுக்கே சென்று, மெல்லிய ஆகலின் -இப்பொழுது மெலிவையுடையவாதலினால், ஏனல் அம் சிறு தினை காக்கும் - தினைச் சாதியுள் அழகிய சிறிய தினையைக் காக்கின்ற, சேணோன் - பரணின் மேலுள்ள குறவனது, ஞெகிழியின் - கொள்ளிக் கட்டையினால், பெயர்ந்த -அஞ்சிப்போன, நெடு நல் யானை - உயர்ந்த நல்ல யானை யானது, மீன் படு சுடர் ஒளி - விண்மீன் வீழ்வதனால் உண் டாகிய மிக்க ஒளியை, வெரூஉம் - அஞ்சுகின்ற, வான் தோய் வெற்பன் - வானத்தை அளாவிய மலையையுடைய தலைவன், மணவா ஊங்கு - பொருந்துதற்கு முன்பு, மேவரத் திரண்டு - விரும்பும்படி பருத்து, நல்ல என்னும் சொல்லை மன்னிய - இவை நல்லன என்று கூறப்படும் சொற்களை அடைந்தன.

     (முடிபு) தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லைமன்னிய.

     (கருத்து) தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்புஉண்டாகின்றது.