பக்கம் எண் :


664


(அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவனதுநட்பு என்றும் அழியாதது” என்று தோழி கூறியது.)
 373.   
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்  
    
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் 
    
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை யஞ்சிக் 
    
கேடெவ னுடைத்தோ தோழி நீடுமயிர்க் 
5
கடும்ப லூகக் கறைவிர லேற்றை 
    
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி 
    
காந்தளஞ் சிறுகுடிக் கமழும் 
    
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. 

என்பது அலர் மிக்கவழித் (பி-ம். மிக்கவழி ஆற்றாளாகித்) தலைமகட்குத்தோழி சொல்லியது.

மதுரைக் கொல்லன் புல்லன் (பி-ம். மதுரைக் கொல்லம் புல்லன்,மதுரைக் கோலம் புல்லன், மதுரைக் கொலம் புல்லன்.)

     (பி-ம்.) 1. ‘நீர்திரிந்து பிறழினும்’; 6. ‘புடையூ நாறு’; 7. ‘காந்தள்சிறுகுடிக்’; 8. ‘அமைந்த தொடர்பே’.

    (ப-ரை.) தோழி--, நீடு மயிர் - நீண்ட மயிரையும், கடுபல் - கூரிய பற்களையுமுடைய, ஊகம் கறை விரல்ஏற்றை - கருங்குரங்கினது கறுப்பையுடைய விரல்களையுடைய ஆணானது, புடை தொடுபு - பக்கத்திலே தோண்டியதனால், உடைஇ - உடைந்து, பூ நாறு பலவுகனி - மலரின்மணத்தை வீசும் பலவினது பழம், காந்தள் அம் சிறு குடிகமழும் - காந்தளையுடைய அழகிய சிறிய ஊரினிடத்தேமணக்கின்ற, ஓங்கு மலைநாடனொடு - ஓங்கிய மலையையுடைய நாடனோடு, அமைந்த நம் தொடர்பு - பொருந்தியநமது நட்பானது, நிலம் புடை பெயரினும் - உலகம் இடம்மாறினாலும், நீர் தீ பிறழினும் - நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும், இலங்குதிரை பெரு கடற்கு எல்லைதோன்றினும் - விளங்குகின்ற அலைகளையுடைய பெரியகடலுக்கு எல்லை தோன்றினாலும், வெ வாய் பெண்டிர்கௌவை அஞ்சி - வெவ்விய வாயையுடைய மகளிரதுபழிச்சொல்லை அஞ்சி, கேடு எவன் உடைத்து - கெடுதல்எவ்வாறு உடையதாகும்?

     (முடிபு) தோழி, நிலம்பெயரினும் நீரும் தீயும் பிறழினும் எல்லை தோன்றினும் தொடர்பு கேடு எவன் உடைத்து?