பக்கம் எண் :


92


    அறிதுமென்றது எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது.

    செம்மண்ணிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல நம் நெஞ்சம் ஒன்றோடொன்று கலந்து தன்மைகள் ஒன்றுபட்டனவென்று உவமையை விரித்துக் கொள்க. நெஞ்சுகலந்தமைக்குச் செம்புலப் பெயனீரை உவமை கூறிய சிறப்பால் இச்செய்யுளின் ஆசிரியர் 'செம்புலப் பெயனீரார்' என்னும் சிறப்புப் பெயர்பெற்றார். நெஞ்சங் கலந்தனவென்பது உள்ளப் புணர்ச்சியைக் குறித்தபடி; ‘உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியும், கள்ளப் புணர்ச்சியுட் காதலர்க் குரிய (நம்பி.34).

    ‘நம்மைப் பெற்றோரிடையேனும் நம்மிடையேனும் இதற்கு முன் ஒரு தொடர்பும் இல்லை; அங்ஙனம் இருப்பவும் நம் ஊழ்வினையின் வன்மையினால் இப்பொழுது ஒன்றுபட்டோம்; ஆதலின் இனிப் பிரிவு நேராது’ என்று தலைவன் புலப்படுத்தித் தலைவியின் அச்சத்தை நீக்கினான்.

    ஓகாரமும் ஏகாரமும் அசைநிலை.

     (மேற்கோளாட்சி) மு. களவுக்காலத்து வருந்திய வருத்தந்தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற்கண் தலைவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல் .கற்பு. 5, இளம்); பிரிவரெனக் கருதிய தலைவியின் குறிப்புணர்ந்து தலைவன் கூறியது (தொல். களவு.10, ந. 11, இளம்); நம்மானன்றி நெஞ்சம் தம்மிற்றாம் கலத்தலின் தெய்வத்தானாயிற்றெனத் தலைவன் தலைவியைத் தெருட்டியது (தொல்.கற்பு.5,ந); தெளித்தல் (தமிழ்நெறி.15); தலைவன் பிரியேனென்றது (நம்பி.129).

    ஒப்புமைப் பகுதி 1. ஞாய் ;கலி.81:12, 85:28, 36, 107:25. “்யாராகியர்; குறுந்.110:2 செம்புலப்பெயனீரின் தன்மை: “நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தார்க், கினத்தியல்ப தாகு மறிவு”, “நிலத்தொடு, நீரியைந் தன்னார்” (குறள்.452,1323);”அப்பென்றும் வெண்மைய தாயினு மாங்கந் நிலத்தியல்பாற், றப்பின்றி யேகுண வேற்றுமை தான்பலசார்தலினால்”(திருவேகம்பமாலை); ”செந்நில முகுநீர் போலச் செல்விமான் மயமே யாகி”(பிரபு.5:17)

(40)
  
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)
 41.    
காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
    
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
    
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
    
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
5
புலப்பில் போலப் புல்லென் 
    
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.