பக்கம் எண் :


94


     (மேற்கோளாட்சி) மு. பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பதுபடக் கூறியது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 2. விழாக்கொண்ட ஊரைப் போல மகிழ்தல்: “விழவுமேம் பட்டவென் னலனே” (குறுந். 125:4).

    3. மு. அகநா. 9:10.

    5. புல்லென்றல்: குறுந்.19:2, ஒப்பு.

    5-6. தலைவன் பிரிதலால் தலைவி பொலிவழிதல்: “உழையிற் பிரியிற் பிரியும், இழையணி யல்குலென் றோழியது கவினே” (கலி. 50; 23-4).

    3-6. “உண்ட லளித்தெ னுடம்பே விறற்போர், வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேரூர்ப், பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே” (நற். 153:7-10); “கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற், புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டமைவாளோ”, “நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர், அல்குநர் போகிய வூரோ ரன்னர்” (கலி.5: 10-11, 23: 10-11).

(41)
  
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும் நும் நட்பு அழியாது” என்று குறிப்பால் தோழி மறுத்தது.)
 42.    
காம மொழிவ தாயினும் யாமத்துக் 
    
கருவி மாமழை வீழ்ந்தென வருவி  
    
விடரகத் தியம்பு நாடவெம் 
    
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. 

என்பது இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது.

    (நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தலாவது உடன்பட்டாள் போன்ற சொல்லமைதியும் மறுத்தமையைக் குறிப்பாற் புலப்படுத்தும் பொருளமைதியும் பொருந்தக் கூறுதல்.)

கபிலர்.

    (ப-ரை.) யாமத்து - நடு இரவின் கண், கருவி மா மழை - தொகுதியையுடைய பெரிய மழை, வீழ்ந்தென - பெய்தலால், அருவி விடரகத்து இயம்பும் - நீர் பெருகி அதனால் அருவியானது பின்நாளிலும் மலைமுழைஞ்சுகளில் ஒலிக்கும், நாட - குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமம் ஒழிவது ஆயினும் - காமமானது நீங்குவதாக இருப்பினும், நின்வயினான் - நின்னிடத்தில், எம் தொடர்பும் தேயுமோ - எமக்குள்ள நட்பும் அழியுமோ? அழியாது.

    (முடிபு) நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எம் தொடர்பும் தேயுமோ?