பக்கம் எண் :


102


    4. மறுவருதல்: “மறுவந் தோடி” (குறுந்.65:2, 394:3); “பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கி” (பெருங்.1.33:127)

(45)
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாளென்று கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உளவாதலின் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி யான் ஆற்றுகின்றேன்” என்று தலைவி கூறியது).
 46.   
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன 
    
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ 
    
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் 
    
தெருவினுண் டாது குடைவன வாடி 
5
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் 
    
புன்கண் மாலையும் புலம்பும் 
    
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவலென்பது படச் சொல்லியது.

மாமலாடன் (பி-ம். மாமிலாடன்.)

    (பி-ம்) 3-4. ‘மன்றதெருவின்’ 4. ‘தெருவை நுண்டாது’.

    (ப-ரை.) தோழி -, ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன - ஆம்பல் மலரின் வாடலையொத்த, கூம்பிய சிறகர் - குவிந்த சிறகுகளையுடைய, மனை உறை குரீஇ - வீட்டின்கண் தங்கும் குருவிகள், முன்றில் உணங்கல் மாந்தி - முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, மன்றத்து - பொதுவிடத்தின் கணுள்ள, எருவின் நுண்தாது குடைவன ஆடி - எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, இல் இறை பள்ளி - வீட்டிறப்பிலுள்ள இடத்தே, தம் பிள்ளையொடு வதியும் - தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும், புன்கண் மாலையும் - பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர் சென்ற நாட்டு - அத்தலைவர் பிரிந்து சென்ற தேயத்தில், இன்றுகொல் - இல்லையோ?

    (முடிபு) தோழி, அவர் சென்ற நாட்டு, மாலையும் புலம்பும் இன்று கொல்?