பக்கம் எண் :


106


(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை வரைந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)
 48.   
தாதிற் செய்த தண்பனிப் பாவை 
    
காலை வருந்துங் கையா றோம்பென 
    
ஓரை யாயங் கூறக் கேட்டும் 
    
இன்ன பண்பி னினைபெரி துழக்கும் 
5
நன்னுதல் பசலை நீங்க வன்ன 
    
நசையாகு பண்பி னொருசொல் 
    
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 

என்பது பகற்குறிக்கட் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், (தொல். களவு. 16) வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

    (‘இவ்வகை பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும் பொழுதிற் காணாப்பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து கடலிற்கானும் கானலிற் கானும் ... ... வறிதே குழவி அழுதாற் போல யாதானும் ஒரு சொற் சொல்லும்’(18) என்பது இறையனாரகப் பொருள் உரை.)

பூங்கணுத்திரையார் (பி-ம். பூங்கணுத்தரையார்.)

    (பி-ம்) 5.‘நன்னுதற் பசலை’ 6. ‘நசையாடு’.

    (ப-ரை.) தாதின் செய்த - பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட, தண் பனி பாவை - மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவையானது, காலை வருந்தும் - காலைப் பொழுதில் வருந்துதலாற் பிறந்த, கையாறு ஓம்பு என - செயலறுதலை ஒழிப்பாயாகவென்று, ஓரை ஆயம் - விளையாட்டையுடைய மகளிர் திரள், கூற கேட்டும் - சொல்லக் கேட்டபின்பும், இன்ன பண்பின் - இத்தகைய தன்மையையுடைய, இனை பெரிது உழக்கும் - வருத்தத்தை மிக அடையும், நன் நுதல் - நல்ல நெற்றியையுடைய தலைவியினது, பசலை நீங்க - பசலை நீங்கும்படி, காதலர் தமக்கு - தலைவர் மாட்டு, நசை ஆகு பண்பின் - இவளுக்கு விருப்பமாகும் தன்மையையுடைய, அன்ன ஒரு சொல் - அத்தகைய ஒரு சொல்லானது, இசையாது கொல் - இயலாதோ?

    (முடிபு) ஆயம் கூறக்கேட்டும் உழக்கும் நன்னுதலின் பசலை நீங்க ஒரு சொல் காதலர் தமக்கு இசையாது கொல்?