(பி-ம்) 1. ‘ஆர்கலி மிகுத்த’, ‘ஆர்கள’ 2. ‘கூரசைத் தனையையாய்’, ‘சூரசைந்தனையையாய்’ 4. விரிந்திலங்கு’ 5. ‘பரந்தனென’. (ப-ரை.) நரந்தம் நாறும் - நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற, குவை இரு கூந்தல் -தொகுதியாகிய கரிய கூந்தலையும், நிரந்து இலங்கு வெள் பல் - வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய, மடந்தை -மடந்தையே, ஆர் களிறு மிதித்த நீர் - தன்பால் பொருந்திய யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர், திகழ் சிலம்பில் - விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள, சூர்நசைந் தனையையாய் - தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நடுங்கல் கண்டு - நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து, யான் - நின் வருத்தத்தைப் பொறாத யான், இறை இறை -சிறிது சிறிதாக, பரிந்தனென் அல்லனோ - அப்பொழுதப் பொழுது இரங்கி வருந்தினேனல்லனோ?
(முடிபு) மடந்தையே, நீ நடுங்கல் கண்டு யான் பரிந்தனென் அல்லனோ?
(கருத்து) நின் துயர் கண்டு ஆற்றாமல் யான் அறத்தொடு நின்றேன்.
(வி-ரை.) களிறு மிதித்த இடம் பள்ளமாதலும் அங்கே நீர் தங்குதலும், “விலங்குமலைக் கவாஅற், கரும்புநடு பாத்தியன்ன, பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே” (குறுந். 262:6-8) என்பதனாலும் உணரப்படும். சிலம்பிற் சூரென்றது மலைப் பக்கத்தில் வாழுந் தெய்வங்களை; அவர் வரையர