பக்கம் எண் :


124


காமம்” (அகநா. 361: 5-6). 3-4. பிரிதலைக் காட்டிலும் உயிர் செல்லுதல் நலம்: குறுந். 32:6, ஒப்பு; நற். 129: 1-2, 203: 7-8;ஐங்.111: 3-4: கலி.2:13, 3:6, 4:24, 5: 18-9, 10:21, 21: 12-3; அகநா. 305:8, 339: 11-4. 6. இருவேம்: கலி. 43:4.6. உய்தல்: குறுந்.11:3, ஒப்பு.

 மு. 
“மணிநீர்க் கயத்து மலரிடை தட்பினும் வார்கழுத்துப்  
  
 பிணிநீர் மையிற்சற்று நீங்கினு மூழி பெயர்ந்தனைய 
  
 துணிநீர் மகன்றிலிற் றண்டாது காமத் துறைபடியும் 
  
 அணிநீர் மையினுயி ரோராங் ககல்கதி லம்புவிக்கே”  
  
                     (தணிகைப். களவுப். 72)  
(57)
  
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)
 58.   
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக  
    
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல 
    
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் 
    
கையி லூமன் கண்ணிற் காக்கும் 
5
வெண்ணெ யுணங்கல் போலப் 
    
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. 

என்பது கழற்றெதிர்மறை.

    (கழறுதல் - தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தல். எதிர்மறை - தலைவன் எதிர்மறுத்தரைத்தல்.)

வெள்ளிவீதியார்.

    (பி-ம்) 2. நிறுத்தலாற்றினோ; 3. வெயில்பயின் மருங்கின்; 6. நொண்டு கொளற், மொண்டு கொளற்.

    (ப-ரை.) இடிக்கும் கேளிர் - இடித்துரைக்கும் நண்பரே, நும் குறையாக - நுமது காரியமாக, நிறுக்கல் ஆற்றின் - என் காமநோயை நிறுத்தலைச் செய்தால், நன்று மன் தில்ல - மிக நன்று; எனது விருப்பம் அது; ஞாயிறு காயும் - சூரியன் வெயில் எறிக்கும், வெ அறை மருங்கில் - வெம்மையையுடைய பாறையினிடத்தே, கைஇல் ஊமன் கண்ணின் காக்கும் - கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற, வெண்ணெய் உணங்கல் போல - உருகிய வெண்ணெயைப்போல, இ நோய் - என்பாலுண்டான இக்காமநோய், பரந்தன்று - பரவியது; நோன்று கொளற்கு அரிது - பொறுத்துக்கொண்டு நீக்குத்தற்கு அரிதாயிருக்கின்றது.