பக்கம் எண் :


126


(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர்" என்று தோழி கூறியது.)
 59.   
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 
    
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்  
    
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்  
    
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் 
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள் 
    
நிரம்பா வாகலி னீடலோ வின்றே. 

என்பது பிரிவிடை யழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

    (அழிந்த - மனம் வருந்திய, வற்புறுத்தியது - ஆற்றியிருத்தல் வேண்டுமென்று துணிவு கூறியது.)

மோசிகீரனார் (பி-ம். மோசிகீரன்).

    (பி-ம்) 1. பரதவர்; 2. அறலைக், அதலைக்; 4.நறு நுதறா வெனின், தாவெ மறப்பரோ மற்றெனா.

    (ப-ரை.) பதலை பாணி - ஒருகண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய, பரிசிலர் கோமான் - பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது, அரலை குன்றம் - அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள, அகல்வாய் - அகன்ற வாயையுடைய, குண்டுசுனை குவளையொடு - ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும், நின் நறு நுதல் - நினது நல்ல நெற்றியை, மறப்பரோ - தலைவர் மறப்பாரோ? முயலவும் - பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும், சுரம் பல விலங்கிய அரு பொருள் - பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள், நிரம்பாவாகலின் - முற்றக் கை கூடாவாதலின், நீடல் இன்று - முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.

    (முடிபு) நறுநுதல் மறப்பரோ? பொருள் நிரம்பா ஆகலின் நீடல் இன்று.

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.