கருவூர் ஓதஞானி. (பி-ம்) 4.கானவனல்குறூஉமகளே, நல்குவா மகளே.
(ப-ரை.) நெஞ்சே, அரும்பிய சுணங்கின் - தோற்றிய தேமலையுடைய, அம் பகடு இள முலை - அழகிய பெருமையையுடைய இளைய நகிலையும், பெரு தோள் - பெரிய தோளையும், நுணுகிய நுசுப்பின் - நுண்ணிதாகிய இடையையும் உடைய, கல்கெழு கானவர் - கற்கள் பொருந்திய காட்டையுடையவர், நல்குறு மகள் - பெற்ற மகள், மருந்து எனின் மருந்து - காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று கருதுங்கால் எனக்குப் பரிகாரமாவாள்; வைப்பு எனின் வைப்பு - போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமுமாவாள்.
(முடிபு) மகள், மருந்தெனின் மருந்து; வைப்பெனின் வைப்பு.
(கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.
(வி-ரை.) இவளைப் பிரியின் காமநோய்க்கு மருந்தில்லை யென்பதும், அம்மருந்தும் யான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வமும் இவளேயாதலின் செல்லுதல் தவிர்வேனென்பதும் புலப்படுகின்றன, மருந்து - அமிழ்தமும் ஆம். வைப்பு - சேம நிதி. மருந்தே, வைப்பே: ஏகாரங்கள் அசைநிலை: தேற்றேகாரங்களுமாம்.
பகடு - பெருமை (புறநா. 68:5, உரை). தோள்பெருத்தலும் இடை சிறத்தலும் மகளிர்க்கு அழகு; "தோள்.... எனப் பெருகி, நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி" (கலி. 108:2-3). கல் - மலையுமாம். கல்கெழு கானவர் நல்குறு மகளென்பது அனைத்தும் ஒரு பெயராய் நின்று முலை முதலியவற்றோடு இயைந்தது. மகளே: ஏகாரம் அசை நிலை.