பக்கம் எண் :


154


    (மேற்கோளாட்சி) 3. செய்யுளில் இனச்சூட்டில்லாப் பண்புகொள் பெயர் வந்தது (தொல். கிளவி. 18, இளம், கல்.).

    மு. தலைவன் வருகின்றானென்ற உழையர்க்குத் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, இளம்.); தலைவன் வரவைத் தலைவி விரும்பிக் கூறியது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 4. பெறீஇயர்: குறுந்.83; 2, 277:5, நற். 111. 3-4. தலைவன் வரவைக் கூறியவரைத் தலைவி வாழ்த்தல்: குறுந். 201.

(75)
  
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி புலந்தது.)
 76.    
காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்  
    
செல்ப வென்பவோ கல்வரை மார்பர் 
    
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை 
    
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக் 
5
தண்வரல் வாடை தூக்கும் 
    
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே. 

என்பது பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.

கிள்ளிமங்கலங்கிழார்.

    (பி-ம்) 2.செல்வ, னென்ப வோங்கல்வரை மார்பன், செல்வ வென்பவே, என்பநங்கல்வரை, என்பவோங்கல் வெற்பர்; 4.தைஇய; 5.தூங்கும்; 6.யற்சிரம்.

    (ப-ரை.) தோழி---, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை, பெரு களிறு செவியின் மான - பெரிய களிற்றினது செவியை ஒப்பத் தோன்றும்படி, தைஇ - தடவி, தண்வரல் வாடை - தண்ணிய வரவையுடைய வாடைக் காற்று, தூக்கும் - அசைத்தற்குரிய, கடு பனி அச்சிரம் - மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில், நடுங்கு அஞர் உற - நடுங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி, கல் வரை மார்பர் - கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர், காந்தள் வேலி ஓங்கு மலை நல்நாட்டு - காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து, செல்ப என்ப - என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்.