பக்கம் எண் :


158


(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)
 78.    
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி  
    
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்  
    
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப 
    
நோதக் கன்றே காமம் யாவதும் 
5
நன்றென வுணரார் மாட்டும் 
    
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே. 

என்பது பாங்கன் தலைமகற்குச் சொல்லியது.

நக்கீரனார் (பி-ம். நக்கீரர்).

    (பி-ம்) 6. ‘பெரும் பேதைத்தே’.

    (ப-ரை.) பெரு வரை மிசையது - பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய, நெடு வெள் அருவி - நெடிய வெள்ளிய அருவியானது, முது வாய் கோடியர் - அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது, முழவின் ததும்பி - முழவைப்போல ஒலித்து, சிலம்பின் இழிதரும் -பக்கமலையின்கண் வீழும், இலங்கு மலைவெற்ப - விளங்குகின்ற மலைகயையுடைய தலைவ, காமம் - காமமானது, யாவதும் - சிறிதும், நன்றென உணரார் மாட்டும் - இது நன்மையென உணரும் அறிவில்லா தாரிடத்தும், சென்று நிற்கும் - சென்று தங்குகின்ற, பெரு பேதைமைத்து -பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது, நோதக்கன்று - வெறுக்கத்தக்கது.

     (முடிபு) வெற்ப, காமம் பெரும்பேதைமைத்து; நோதக்கன்று.

     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

     (வி-ரை.) பெருவரை - அளக்கலாகா அளவும் பெருமையும் வறப்பினும் வளந்தரும் வண்மையு முடைய மலை மிக உயர்ந்த மலையாதலின் அருவியும் நெடியதாயிற்று, முதுவாய்க் கோடியர் - அறிவு வாய்த்தலை யுடைய கூத்தர் (பட். 253, ந.); அறிவுமுதிர்ந்த வாய்மையையுடைய கூத்தரெனலும் (முருகு. 284, ந; புறநா. 48:7) ஆம்.

     ததும்புதல் - ஒலித்தல் (கலி. 70:10, ந.); பெருங். 1. 46: 246; தே. 2554. வெற்பனென்பது குறிஞ்சிநிலத் தலைவனென்னும் பொருளைத் தந்து இடுகுறி மாத்திரையாய் நின்றது (திருச்சிற். 128, பேர்.) காமம் - தலைவியின்பாலுள்ள பெருவிருப்பம். உணராரென்றது, காமநுகர்ச்சிக்குப் பொருளாகியவரை; இங்கே தலைவியைச் சுட்டியது.