பக்கம் எண் :


179


     (வி-ரை.) களிறும் புலியும் எதிர்த்துப் போர்செய்யும் சாரலாதலின் துன்னுதற்கு அரியதாயிற்று. வயப்புலி - சிங்கமுமாம்; ஈங்காய். 4. நடுநாள் - இடையாமம். வருதலும் வரூஉம்:

    “நல்கினு நல்குவர்” (குறுந். 37:1) என்பதன் விசேடவுரையைப் பார்க்க. ‘நடுநாள் வருதலும் வரூஉம்’ என்பது இரவுக்குறி நேர்ந்ததைப் புலப்படுத்தியவாறு.

     வடுவென்றது தலைவன் வருதலைப் பிறர் குறிப்பால் அறிந்து பழிகூறுதலை; வடு - குற்றம்; பரி.2:24.

     வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் வடுவை நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.

    அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்குப் பயன்படுவானென்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) மு. பகற்குறி நேர்ந்த இடத்துத் தோழி தலைவிக்குக் கூறியது (தொல். களவு. 24, இளம்.); இரவுக்குறி மறுத்தது (தமிழ்நெறி. 18); பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறையறிவுறுத்தல் (நம்பி. 158.)

     (கு-பு.) இரவுக்குறி மறுத்தலென்னும் கருத்துச் சிறப்புடையது.

    3. (பி-ம்.) சொல்லும் - நீக்கும்; அகநா. 8:10; சீவக.1146.

    ஒப்புமைப் பகுதி 2-3. களிறு புலியைத் தாக்குதல்: குறுந். 141:4-5, 343:1-3; மலைபடு. 307-9; நற். 36:1-3, 39:4-7, 104:1-2, 151:2-3, 202: 1-4, 217:2-5, 247:1-2, 353:9-10; கலி. 38:6-7, 42:1-2, 48:1-7 49:1-2, 52:1-4, அகநா. 332:2-9.

    4. தலைவன் நள்ளிருளில் வருதல்: குறுந், 268:5. வருதலும் வரூஉம்: குறுந். 37:1, ஒப்பு.

(88)
  
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.)
 89.    
பாவடி யுரல பகுவாய் வள்ளை  
    
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப 
    
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே 
    
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் 
5
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய 
    
நல்லியற் பாவை யன்னவிம் 
    
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. 

என்பது (1) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.