பக்கம் எண் :


189


     மாலைக்காலத்திற் பறவைகள் தம் கூட்டிற்கு வந்து அடங்கும்; “குரீஇ... இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும், புன்கண் மாலை” (குறுந்.46), “விலங்கும் பறவையும் வீழ்துணைப்படர” (பெருங். 1. மாலைப் புலம்பல், 43.) இறையுறல் - தங்குதல் “புன்னைத் தடவுநிலை மாச்சினைப், புள்ளிறை கூரும்” (அகநா. 10:3-4) என்பதையும், ‘இறை கூரும் - தங்குதல் மிகும்’ என்னும் அதன் உரைக்குறிப்பையும் பார்க்க. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” (தொல். மரபு. 4) என்பது விதியாகலின், பறவைக் குஞ்சைப் பிள்ளை யென்றாள். செரீஇய- செருகும் பொருட்டு; செருகி யென்பது செரீஇயென்று வந்தது (குறுந். 295:1); இங்ஙனமே பருகியென்பது பரீஇயென (நாலடி.220) வருதல் காண்க.

     தாம், ஆல், ஏ: அசைநிலைகள்.

     இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது பெறப்படும்.

    (மேற்கோளாட்சி) மு. இரங்கல், நிமித்தமென்னும் உரிப்பொருள் வந்தது (தொல். அகத். 14, ந.); தலைவிக்கு காமம் சிறந்து தோன்றினமையின் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. அகல்வாய் வானம்: குறுந். 44:3, ஒப்பு.

    2. கொடுஞ்சிறைப் பறவை: “கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை” (குறுந். 352:2)

    3. நெறியயன் மராம்: அகநா. 121:8.

    4. பிள்ளை: குறுந்.46:5, 139:4.

    2-4. பறவை இரையைப் பிள்ளையின் வாயிற் செருகுதல்: “இரைதேருந் தடந்தா ணாரை, ஐய சிறுகட் செங்கடைச் சிறுமீன், மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத், தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்” (நற். 91:4-7); “கழனி யாரல் கவுளகத் தடக்கிப், பழன மருதிற் பார்ப்புவாய்ச் சொரிந்து, கருங்கா னாரை நரன்றுவந் திறுப்ப”, “பல்சிறைப் புறவம் பரிந்துட னாடி, அவ்வாய்க் கொண்ட வாரிரை யமிழ்தம், செவ்வாய்ப் பார்ப்பிற்குச் சேர்ந்தவண் சொரிதலின்” (பெருங். 3.7:29-31. 5. 1:68-70)

(92)
  
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ சினவற்க; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியரல்லர்” என்று தலைவி கூறியது.)
 93.    
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்  
    
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் 
    
கன்னையு மத்தனு மல்லரோ தோழி  
    
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.

அள்ளூர் நன்முல்லையார்.