(கலி. 23:9) தீயை வலிக்கு உவமை கூறும் மரபு, “தீயெழுந் தன்ன திறலினர்” (முருகு. 171) என்பதனாலும் புலப்படும். எதிர்ப்பட்ட பொருளை அழிக்கும் தன்மையதாகலின் தீயை எதிர்ப்படு பகையை அழிக்கும் வலிக்கு உவமை கூறுவர்;
| “வளித்தலைஇய தீயும்... போல... தெறலும் ... உடையோய்” (புறநா. 2:4-8) |
என்பதையும் அதன் உரையையும் பார்க்க.
பகையையழிக்கும் தீயன்ன என் வலியைத் தீயை யழிக்கும் நீரன்ன குறமகளது மென்மை அழித்ததென்றான்;
| “ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், |
| நண்ணாரு முட்குமென் பீடு” (குறள். 1088) |
என்பதில் இக்கருத்து விளங்குதல் காண்க.
பெருந்தோட்குறுமகளென்றது, குறிப்பால் என் உரன் அவிதற்கு அத்தோளும் காரணமாயதென்பதை உணர்த்தியது. குறுமகளென்றான், பெருந்தலைமையையுடைய என் உரனவியச் செய்தாளென்னும் வியப்புத் தோன்ற.
தலைவன்பாற் சோர்வுகண்ட பாங்கன், “நினக்கு இவ்வாட்டம் எற்றினானாயிற்று?” என்று வினாயினனாக, தலைவன், “குறுமகள் சாயலினாயிற்று” என்றான்.
ஏகாரம் அசைநிலை.
(மேற்கோளாட்சி) 4-5. பொருளும் பொருளும் முரணின (தொல். செய். 95, ந. பேர்.); கட்டளையடியும் சீர்வகையடியும் முரணின (தொல். செய். 95, ந.)
ஒப்புமைப் பகுதி 1-2. அருவி கன்முகையில் ஒலித்தல்: (குறுந். 42:2-3, ஒப்பு.); “கன்முகை யருவி” (புறநா. 147:1, பி-ம்)
3. குறவன் மகள்: ஐங். 255-60.
பெருந்தோள் குறுந். 71:3,ஒப்பு.
குறுமகள்: குறுந். 89:7,ஒப்பு.
நீரை ஒத்த சாயல்: “புதுநிறை வந்த புனலஞ் சாயல்” (மலைபடு. 61); “வானி நீரினும், தீந்தண் சாயலன்” (பதிற். 86:12-3); “நீரினுஞ் சாய லுடையன்”, “வேனிற் புனலன்ன நுந்தை”, “நீருணிழற்போ னுடங்கிய மென்சாயல்”(கலி. 42:20, 84:38, 94:2); “நீரனு மினிய சாயற், பாரி வேள்” (புறநா. 105:7-8)
(95)
(தலைமகன் வரையாதுவந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.) 96. | அருவி வேங்கைப் பெருமலை நாடற் |
| கியானெவன் செய்கோ வென்றி யானது |
| நகையென வுணரே னாயின் |
| என்னா குவைகொ னன்னுத னீயே. |