வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய் யொழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்-அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும். படிறு பொய். பிறர் காணவில்லை யென்று மறைவாகத் திருடும் திருடனின் திருட்டை, குறைந்த பக்கம் எங்கும் நிலைத்துள்ள நிலம் வளி வெளி என்னும் மூன்று பூதங்களேனும் தப்பாமற் காணும். ஆயின், கூடா வொழுக்கத்ததானது மனத்தின் பொய்த் தன்மையையும் மறைந்த காமவொழுக்கத்தையும் அவனுடற் கூறாகவும் ஐம் பொறிகளாகவுமுள்ள ஐம்பூதங்களும் காணுவதால், 'பூதங்களைந்தும்' என்றும், அவை அவனுக்கும் பிறர்க்கும் தெரியாமல் நகுவதால் 'அகத்தே நகும்' என்றும் கூறினார். இது மறை வொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ள தெனக் கூறியவாறு. பிறரை ஏமாற்றுவதால் 'வஞ்சமனம்' என்றார். |