உதயணன் பந்தடி காணல்
222. பந்தடி காண்க வென்னப்
பார்த்திப னினிய னாகிக்
கந்துகப் பூசல் காணக்
கலிற்றின்மீ தேறி வந்து
கொந்தலர் மாலை மாதர்
குழுவுடன் சூழ நிற்ப
வந்தனள் பதுமை தோழி
வனப்பிரா சனையென் பாளாம்.
(இ - ள்.) தேவிமார் உதயணனைத் தொழுது
பெருமான் இற்றைநாள் மகளிராடும் பந்தாட்டத்தைக்
கண்டருள வேண்டுமென்று வேண்ட, அதுகேட்ட அம்மன்னன்
மிகவும் மகிழ்ச்சியுடையனாகி அந்தப் பந்துப்
போரினைக் கண்டு களிக்கும்பொருட்டு ஒரு
களிற்றியானையின் மேலேறிப் பந்தாடு களத்திற்கு
வந்து, கொத்தாக மலர்ந்த மலர்மாலை யணிந்த மகளிர்
கூட்டந் தன்னைச் சூழ்ந்து நிற்கும்படியாத நிற்கும்பொழுது
பதுமாபதியின் தோழியாகிய அழகுமிக்க ’இராசனை’
என்பவள் பந்தாடு களத்தில் வந்தனள் என்க. (37)
மகளிர் பந்துப் போர்
இராசனை
223. ஓரேழு பந்து கொண்டே
யொன்றென்றி னெற்றிச் செல்லப்
பாரெழு துகளு மாடப்
பலகல னொலிப்ப வாடிச்
சீரெழு மாயிரங்கை
சிறந்தவ ளடித்து விட்டாள்
காரெழு குழலி நல்ல
காஞ்சன மாலை வந்தாள்.
(இ - ள்.) பந்தாடுதலிற் சிறந்த அவ்விரசனை
என்பவள் ஏழு பந்துகளை ஒருங்கே கைக்கொண்டு ஒரு பந்து
மற்றொரு பந்தினைப் புடைத்து ஒன்றன்பின்
னொன்றாகச் செல்லும்படியும் நிலத்திலே எழுகின்ற
துகளெழுந்து ஆடும்படியும் தனது பல்வேறு அணிகலன்களும்
ஆரவாரிப்பவும் சிற்ப்புத் தோன்ற ஆயிரங்கை
இடையறாது அடித்து நிறுத்ினளாக; அவளின் பின் வாசவதத்தையின்
தோழியாகிய முகில்போன்ற கூந்தலையுடைய நல்லாள்
‘காஞ்சனமாலை’ என்பவள் களத்தில் வந்தனள் என்க.
(38)
|