(இ - ள்.) “அரசே! அத்தேவன் நம்பாலன்பினாலே
நீங்கள் இனி எப்போதாயினும் நுமக்கு இவ்வாறு இடுக்கண்
வந்தாலும் என்னை நினைவீராக! என்று கூறி அவனை நினைத்தற்குரிய
நிலை பேறுடையதொரு மந்திரத்தையும் தனது வள்ளன்மையாலே
நமக்குச் செவியறிவுறுத்துப் போயினனல்லனோ! அத்தேவன்
கூறிய அந்தச் சிறந்த மந்திரத்தை ஆராய்ந்து இப்பொழுது
பெருமான் ஓதுக!” என்று கூறினன் அது கேட்ட பின்னர்
உதயணகுமரனும் அம்மந்திரத்தாலே அத்தேவன் நினைத்தவுடன்
பெருமையுடைய அந்தத் தேவனும் அவர்கள் முன்வந்து தோன்றினன்
என்க. (4)
தேவன் கூற்று
246. பலவுப சாரஞ் சொல்லப்
பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட
நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியவந் தலைத்த போதும்
வாசவ தத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ்
செற்றோரைச் செகுத்த போதும்.
(இ - ள்,) தேவன் வரவு கண்ட உதயணகுமரன்
அத்தேவனுக்குப் பல்வேறு முகமன் மொழிகளைக் கூறி
மகிழ்வித்த பின்னர் அம்மாநில மன்னனை நோக்கி
அத்தேவன் இம்மொழிகளைக் கூறுவான்-- “வேந்தே! நீ
பகைவரால் நின்னைத் துன்பப்படுத்தப்பட்ட உஞ்சை
நகரத்துச் சிறைக் கோட்டத்தில் இருந்த காலத்திலாதல்
அல்லது, காட்டினூடே வேடர்கள் வலிய வந்து வளைத்துக்கொண்டு
வருந்திய காலத்திலாதல், அல்லது சிலநாள் நின்னை
வாசவதத்தை பிரிந்திருந்த நின் இன்னாக் காலத்திலாதல்,
அல்லது நீ நின் பகைவரை எதிர்த்துப் போர்புரிந்த
காலத்திலாதல்,” என்க. (மேலே தொடரும்)
இதுவுமது
247. மித்திர னென்றே யென்னை
வேண்டிமுன் னினைத்தா யில்லை
பொற்றிரு மார்ப விந்நாட்
புதுமையி னினைத்த தென்னை
|