பக்கம் எண் :

130உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


நரவாகனன் திருவுலா

289. வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காம னேயெனக் கன்னி மங்கையர்
தாம ரைக்கணாற் றான்ப ருகுநாள்.

(இ - ள்.) வீரப்பண்புமிக்க நரவாகனன் வெள்ளி மலைமிசை உயர்ந்து விளங்கும் நாகபுரம் என்னும் நெடிய நகரத்தின்கண் சினமுடைய களிற்றியானையிலேறிச் திருவுலாச் சென்றானாக; அப்பொழுது அந்நகரத்துக் கன்னி மகளிர் இவன் காமவேள் போலும் என்று கருதி அவன் பேரழகாகிய அமுதத்தைத் தாமரைமலர் போன்ற தம் கண்ணாகிய வாயாலே பருகி இன்புறா நின்றனர். இங்ஙனம் நிகழ்வுழி; என்க. (48)

நரவாகனன் எய்திய பேறுகள்

290. நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர்தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முத னிதிக ளொன்பதும்.

(இ - ள்.) வித்தியாதரருலகத்தை முழுதும் ஆள்வதற்கெண்ணிய புகழாளனாகிய அந் நரவாகனன் அந்நாட்டினை வெல்லுதற்கு அழகிய நாகர் மலை மேல் சென்றனன், மாலை மார்பனாகிய அம்மன்னனைக் கண்ட அம்மலை நாகர் முறையோடு எதிர் சென்று வரவேற்றுக் கேளிராயினர்; பின்னர்ச் சக்கர நிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும், என்க. (49)

இதுவுமது

291. நாம விந்திர னன்க ருள்செயக்
காம னுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமி னாலிரண் டொன்ற வாயிரம்.

(இ - ள்.) நரவாகனன்பாற் பேரன்புடைய புகழுடைய தேவேந்திரன் குற்றமற்ற தேவமகளிர் எண்ணாயிரவரையும் அவன்பாற் சேர்க்கும்படி நன்கு வழங்கினமையாலே தேவர்கள் கொணர்ந்து காமவேள் போல்பவனாகிய அந் நரவாகனன்பால் வந்து கண்டு வாழ்த்தி அவற்றை வழங்கிப் பணியா நிற்ப என்க.